-வி.சுகிர்தகுமார், ரீ.கே.றஹ்மத்துல்லா
பதுளை கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்துமுல்ல மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு நாட்டின் பல பாகங்களில் உள்ளோரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
உடைமைகளையும் உறவுகளையும் இழந்த மக்களின் துயரில் பங்கு கொள்வதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்ப இறைவன் துணை நிற்க வேண்டும் என பிரார்திப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினர் தமது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இயற்கையின் கோரத்தினால் துன்பமுற்றுள்ள மக்களுக்கும், தமது உறவுகள், உடமைகளை இழந்து தவிக்கும் இத்தாய்நாட்டின் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
ஹூனைஸ் எம்.பி
மண்சரிவால் பாதிக்கப்பட்ட பதுளை, கொஸ்லந்த மக்களுக்கு எனது தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தில் குறிப்பட்டுள்ளார்.
இச்செய்தி குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்திவருகின்ற மலையக மக்களின் வாழ்வில் ஏற்பட்ட பாரிய அழிவாக இது காணப்படுகின்றது.
இப்பேரழிவினால் உயிர்களையும், உடமைகளையும் இழந்து தவிப்பவர்களுக்கும் என்ன நடந்தது என ஏங்கித்தவிப்பவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.
துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு அனைத்துத் தரப்பினரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இறந்தவர்களின் மறுவாழ்வுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.