2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதிகளுக்கு 2500 வீட்டுத்திட்டம்; தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்காக வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, அதற்காக இந்திய ரூபாவில் 25 கோடியை (சுமார் 650 மில்லியன் இலங்கை ரூபாய்) ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்கள் நலன் காக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அகதிகள் முகாம்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற வகை செய்தல், முகாம்களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் மானியம் வழங்குதல், தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்துதல், வீடுகளை பழுதுப்பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், நியாய விலைக்கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதற்காக 25 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 21 அகதிகள் முகாம்களில் ஒரு வீட்டிற்கு 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீடித்து நிலைக்கக்கூடிய 2500 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், அதற்காக 25 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வழி வகுக்கும்' என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .