2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதாவுல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மப்றூக்

'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்' என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாசன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.

ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ விடயங்கள் இந்தத் தேர்தலில் நடக்காமல் போய் விட்டன. நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் பலருக்கு - இம்முறை, அவை கிடைக்காமல் போயுள்ளன. இதுதான் அரசியல், இதுதான் வாழ்க்கை.

நாலு வரியில் இந்தத் தத்துவத்தை, பொட்டில் அடித்தாற் போல் சொல்லி வைத்த கண்ணதாசனை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. நேற்றுவரை - படை, பட்டாளம், பாதுகாப்புக்களுடன் நம் மத்தியில் வலம் வந்த அரசியல் புள்ளிகளில் கணிசமானோர், தேர்தலுக்குப் பின்னர் - வீட்டை விட்டு வெளியேறுவதற்கே வெட்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பல புதிய முகங்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளன. அதேவேளை, பழம் தின்று - கொட்டை போட்டதாகச் சொல்லும், பழைய அரசியல்வாதிகள் பலர், இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

பலித்த அனுமானங்கள்

இவ்வாறானதொரு நிலையில், கடந்த ஜுலை 21 ஆம் திகதியன்று 'தமிழ் மிரர்' பத்திரிகையில் நாம் எழுதிய 'கதிரைகளுக்கான போர்' என்கிற கட்டுரை அவதானத்துக்குரியது. அந்தக் கட்டுரையில், ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலின் சில முடிவுகளை அனுமானித்து எழுதியிருந்தோம். அவற்றில், அம்பாறை மாவட்ட அரசியல் களம் தொடர்பாக, நாம் எழுதியிருந்த மூன்று விடயங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.   

1.அம்பாறை மாவட்ட ஆசனப் பங்கீட்டில் ஐ.தே.கட்சியிடமிருந்து மு.காங்கிரஸ் 03 முஸ்லிம் வேட்பாளர்களைப் பெற்றுக் களமிறக்கியிருப்பதால், அந்த மூன்று உறுப்பினர்களையும் வென்றெடுக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

2.அம்பாறை மாவட்ட தேர்தல் களம், இம்முறை - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு 'வோட்டலூ'வாக அமைந்து விடும்.

3.அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர்

ரிஷாட் பதியுதீனின் மயில் கட்சிக்கு, ஆசனங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை.

மேற்படி அனுமானங்கள் மூன்றும் அப்படியே பலித்திருக்கின்றன என்பதுதான் இங்குள்ள சுவாரசியமான விடயமாகும். இந்த அனுமானங்கள் பூவா? தலையா? போட்டுப் பார்த்ததனூடாகப் பெற்றுக் கொண்டவையல்ல. வாக்காளர்களின் மன உணர்வுகளைக் கேட்டறிந்து, கள நிலைவரங்களை மதிப்பீடு செய்து அவற்றினூடாகப் பதிவு செய்தவையாகும்.

அதாவுல்லாவின் தோல்வி

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் வாழ்க்கையில், இந்தப் பொதுத் தேர்தலானது மிக முக்கியமானதொன்றாகும். அதாவுல்லா - முஸ்லிம் காங்கிரஸினூடாக அரசியலுக்குள் வந்தவர். மு.காங்கிரஸில், அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்ததாக, அதிகாரம் பொருந்திய பதவியாகக் காணப்படும் தவிசாளர் பதவியை அதாவுல்லா வகித்திருந்திருந்தார். ஆயினும், 2003ஆம் ஆண்டு, மு.கா. தலைமையுடன் முரண்பட்ட நிலையில் கட்சியை விட்டு வெளியேறி, தேசிய காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கி, அதன் தலைவரானார்.

அதாவுல்லா - மு.காங்கிரஸை விட்டு வெளியேறி, தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர் நடைபெற்ற 2004, 2010ஆம் ஆண்டுகளின் பொதுத் தேர்தல்களையெல்லாம், ஓர் அமைச்சராக இருந்துதான் எதிர்கொண்டார். மு.கா.வை விட்டுப் பிரிந்த பிறகு, அதிகாரமும் அமைச்சர் பதவியுமின்றி - அதாவுல்லா முகம் கொடுத்த முதலாவது தேர்தல் - நடந்து முடிந்த பொதுத் தேர்தலாகும். இந்தத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா படுதோல்லியடைந்தார்.

அது என்ன படுதோல்வி?

அதாவுல்லா, அவருடைய அரசியல் வாழ்வில் இதுவரை 05 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். ஆனாலும், அவர் முதன் முதலாக நாடாளுமன்றம் வந்தது, மு.காங்கிரஸின் தேசியப் பட்டியல் மூலமாகத்தான். அதாவுல்லா எதிர்கொண்ட 05 பொதுத் தேர்தல்களில் இரண்டு தேர்தல்களை மு.காங்கிர

ஸின் வேட்பாளராகவும், 03 தேர்தல்களை ஐ.ம.சு.கூட்டணியின் வேட்பாளராகவும் சந்தித்திருக்கின்றார்.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்தான், அதாவுல்லா போட்டியிட்ட முதலாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். இதில், மு.காங்கிரஸின் வேட்பாளராக, மக்கள் முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்ட அதாவுல்லா, 75,647 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் முன்னணியில் போட்டியிட்ட வேட்பாளர்களில்;, இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸினூடாக அதாவுல்லா களமிறங்கிய இரண்டாவது தேர்தல் 2001ஆம் ஆண்டு நடந்தது. இந்தத் தேர்தலில் மு.காங்கிரஸின் மரச் சின்னத்தில் அதாவுல்லா போட்டியிட்டார். இதன்போது, 35,523 விருப்பு வாக்குகள் அவருக்குக் கிடைத்தன. அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், முதலாவது அதிகூடிய விருப்பு வாக்குகள் அதாவுல்லாவுக்கே கிடைத்தன.

இதன் பின்னர், மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற நிலையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாவுல்லா போட்டியிட்டார். இதன்போது, 39,773 விருப்பு வாக்குகள் அவருக்குக் கிடைத்தன. அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டவர்களில், மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, அதாவுல்லா நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.

அதாவுல்லா சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் 2010ஆம் ஆண்டு நடந்தது. அந்தத் தேர்தலிலும், வெற்றிலைச் சின்னத்தில்தான் அவர் போட்டியிட்டார். 36,643 வாக்குகள் கிடைத்தன. அந்தக் கட்சியில் போட்டியிட்டவர்கள் பெற்ற, இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்காக, அது அமைந்தது. அதிலும் அதாவுல்லா வெற்றி பெற்றார்.

இப்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து - தான் சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி வந்த அதாவுல்லா, இம்முறை எவ்விதமான அதிகாரமும் இல்லாததொரு நிலையில், வெற்றிலைச் சின்னம் சார்பாக பொதுத் தேர்தலை எதிர்கொண்டார். இதில், யாரும் எதிர்பாராத வகையில் வெறும் 16,771 விருப்பு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு இம்முறை இரண்டு ஆசனங்கள்தான் கிடைத்தன. ஆனால், விருப்பு வாக்கின் அடிப்படையில் - ஐந்தாம் இடத்துக்கே அதாவுல்லாவால் வர முடிந்தது. அதனால், அவர் படுதோல்வியடைந்தார்.

அதாவுல்லா இந்தத் தேர்தலில் தோல்வியடைவார் என்று நாம் அனுமானித்திருந்தபோதும், இப்படியொரு மோசமான தோல்வியை அவர் முகம் கொள்வார் என நாம் நினைத்திருக்கவில்லை. சாதாரணமாக, ஒரு பிரதேச சபைத் தேர்தலில் பெறப்படும் அதிகூடிய விருப்பு வாக்குகளின் எண்ணிக்கைக்குச் சமனானதொரு தொகையினையே, அதாவுல்லா இந்தப் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்டார் என்பது, அவரின் அரசியல் எதிராளிகளுக்கே அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

இப்படியொரு தோல்விக்கு என்னதான் காரணம்?

தோல்வியும் பின்னணிகளும்

முதலில், இந்தத் தேர்தலிலே - வெற்றிலைச் சின்னத்தில் அதாவுல்லா போட்டியிட்டிருக்கக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளால், மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தினை முஸ்லிம் மக்கள் மிக மோசமாக வெறுக்கத் தொடங்கினர். அந்த வெறுப்பின் பிரதிபலிப்பினை இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் முதன் முறையாக நமக்குக் காணக் கிடைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X