Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு- கிழக்கு தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அல்லது வேறு அரசியல் கட்சிகளின் நல்லெண்ணத்தையிட்டு யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அரசியல் நல்லிணக்கம் என்பவை தொடர்பில் அவர்கள் யாவருமே மக்கள் மைய அணுகுமுறையை கடைப்பிடிப்பதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஏனையோரும், தமது தொகுதி வாக்காளர்கள், மக்கள் ஆகியோரின் எண்ணத்தை தாம் எல்லா வகையிலும் பிரதிபலிப்பதாக கூறுவது மட்டும் போதுமானதல்ல. புனர்வாழ்வு மீள்கட்டுமானம் தொடர்பில் தேவையான பொருட்களில், குறிப்பாக தேவையானவை எவை என்பதை இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகம் என்பவற்றுக்கு எடுத்துக் சொல்வது தொடர்பாக இந்தக் கட்சிகள் செய்ய வேண்டியது நிறையவே உள்ளன. மக்களின் பாரம்பரியம், மனப்பாங்கு என்று பார்க்கும்போது, புனர்வாழ்வுக்காக வாக்களிக்கப்படும் பொருட்கள், மக்களின் தேவைக்கு பொருந்துவனவாக இல்லை. குடில் அமைப்பதற்காக இந்தியாவில் வழங்கப்படும் நாகத்தகரங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும். இந்திய அரசாங்கம், நீண்ட காலம் பயன்படும் என்ற வகையில், கூரை அமைக்க நாகத்தகடுகள் பொருத்தமானது என கருதுகிறது. இவற்றை பெருந்தொகையில் எடுத்துச் செல்வதும் இலகுவானது.
இருப்பினும் சண்டை நடந்த காலத்திலேயே வெப்பத்தை கதிர்வீசச் செய்யும், நாகத்தகரங்களை விட ஓலைக் கூரையே நல்லதென இடம் பெயர்ந்த மக்கள் முறையிட்டிருந்தனர். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யானால் அல்லது இலங்கை இராணுவத்தால் போரில் முதல் பத்து வருடத்திலேயே எல்லா பனை மரங்களும், தென்னை மரங்களும் வெட்டப்பட்டிருந்த நிலையில் இப்போது கூட நாகத் தகரங்களையே பயன்படுத்த வேண்டிவுள்ளது. இருந்தும், தமிழ் மக்களின் விருப்பம் எது என்பது இந்திய அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை அல்லது அவர்களின் அரசியல் சமூக தலைமைகளால் அறிவிக்கப்படவில்லை.
இப்போதும் கூட, இந்தியா வழங்கும் நிவாரணப் பொருட்கள் இந்தியாவில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நியமமான பொதியாகவே உள்ளது எனலாம். தமிழ் பிரதேசத்தில் உள்ள பலர் ஏற்றுக்கொள்ள விரும்பாதுவிடினும், தமிழ் தலைமைத்துவம் கேட்காமலேயே தான் இந்தியா, சண்டை நடக்கும் இடத்துக்கு அண்மையில் காணப்பட்ட குடிமக்களுக்கு சேவை புரிய ஆயுதமில்லாத இராணுவ மருத்துவ அணிகளை அனுப்பியது. இதேபோல் தான், தமிழ் பிரதேசத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மலிவான, பாரமில்லாத ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் அணியினரையும் அனுப்பிவைத்தது.
யுத்தத்தால் அழிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அண்மையில் விஜயம் செய்த, இந்திய வெளிவிவகார செயலாளர், தமிழ் விவசாயிகளுக்கு விதைகளையும் உரத்தையும் வழங்குவது பற்றி பேசியிருந்தார். முன்னர், அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் ஆகிய மூவரும் இந்தியா வந்தபோது இந்திய அரசாங்கம் தமிழ் பிரதேசத்து விவசாயிகளுக்கு ட்ராக்டர்களையும் மினிட்ராக்டர்களையும் கொடுக்க முன்வந்தது. அத்துடன் யுத்தத்தினால் தடைப்பட்டுப் போன வருடாந்தம் மந்தை வழங்கும் செயன்முறையை மீண்டும் தொடங்கவும் முன் வந்தது.
இன்றைய நடப்புகளின் பின்னணியில், இந்தியா வழங்கும் மந்தைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது தனிப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். அரசாங்கத்துடன் உள்ள கருத்து வேறுபாடுகளை கருதாமல், தமிழ் அரசியல் சமூகம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தும் உள்நாட்டு பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் கொள்கையின் பின்னணியில், சாத்தியமான சகலதையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதற்கு விலங்கு வேளாண்மை அமைச்சராக உள்ள மலைநாட்டு தமிழ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உதவி புரிய வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்த் தலைமைத்துவங்கள் இந்தியா வழங்க முன் வந்துள்ள உதவியை தர்க்கமான முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த அமைச்சர், இந்த வாய்ப்பை மலைநாட்டுத் தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த பின்னணியில், தெற்கில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வது பற்றிய தமிழ் அரசியல்வாதிகளின் தயக்கம் பார்க்கப்பட வேண்டும். சிறு கைத்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வேலை வாய்ப்புப் பெற்று தெற்கு வரும் இளம் பெண்களின் பாதுகாப்புக்கு தனது சொந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
இதனிடையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இவ்வாறான இளைஞர்களின், குறிப்பாக யுவதிகளின் பாதுகாப்பு தொடர்பாக தமது விசனத்தையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தமிழ் இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் யுத்தம் காரணமாக தமிழ் பிள்ளைகள் தமது முன்னைய தலைமுறையினர் போலன்றி, கல்வித் தகைமையிலும் குறைவாக உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 1983யின் தமிழர்கள் படுகொலை நினைவுகள் காரணமாக தமிழர்கள் தமது சொந்த பாதுகாப்பையிட்டு கவனமாயிருப்பது ஒரு விடயம். ஆனால் இதை பூச்சாண்டியாகக் காட்டி மக்களை பயப்படுத்தல் இன்னொரு விடயம்.
இதே நேரம், அரசாங்கத்துடன் உள்ள தமிழ் தலைவர்கள், தமிழ் பேசுவோரை எல்லா மட்ட பதவிகளிலும் கூடுதலாக நியமிக்க வேண்டியதன் தேவையை மிகவும் அழுத்தி அரசாங்கத்துக்கு கூறவேண்டும். பொலிஸ் படையில் தமிழர்கள் குறைவாக இருப்பது மிக தெளிவாகத் தெரிகிறது. இது மட்டுமன்றி, அரசாங்க வைத்தியசாலையில் தாதியர்களை நியமிக்கும் போதும் தமிழர்கள் போதியளவில் கணக்கில் எடுக்கபட்டவில்லை என ஒரு அறிக்கை கூறுகிறது.
யுத்தம், அதை தொடர்ந்து வந்த இடப்பெயர்வு காரணமாக அதிக தமிழ் இளைஞர், யுவதிகள் அரசாங்க வேலை ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான போதிய கல்வித் தகைமையை பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். சமூகத்தின் பரந்துபட்ட, நீண்டகால நலன் மீது அக்கறையிருப்பின் அரசியல் கட்சிகள் குறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள், இந்த பிரச்சினை பற்றி முழுமையாக ஏதாவது செய்தாக வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் என்ன செய்யலாம்?
தாராளமான நிதி வளம் கொண்டுள்ள, தம் இனத்தின் மறந்து போன பெருமைகளை மீட்டெடுக்க துடிக்கின்ற புலம்பெயர்ந்த தமிர்கள், இயன்றளவு ஆக்கபூர்வமாக, உரிய தருணத்தில் செயலில் இறங்க வேண்டும். சர்வதேச சமூகத்தில் ஆரம்பித்து சகல மட்டங்களிலும் அரசியல் பிரச்சினைகளை எடுத்துச் செல்வது ஒரு விடயம். தமது நாட்டில் துன்பப்படும் தமது சகோதரங்களுக்கு உதவி வழங்க விரைந்தோடி வருவது வேறு விடயம்.
இந்த மக்களுக்கான குறைந்தபட்ச வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக புலம் பெயர்ந்தவர்கள், தமிழ் பகுதிகளில், பெரிய, சிறிய தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதில் இனியும் தாமதிக்கக் கூடாது. கொழும்பில் உள்ள அரசாங்கத்தின் இழுத்தடிப் போக்கின் காரணமாக இவர்கள் விரும்புவது போல காரியங்களை விரைந்து முடிக்க முடியாமல் போகலாம். ஆனால், இந்த பிரச்சினைக்கு ஏதோ தீர்வு காண வேண்டும். சீன முதலீட்டுக்கு நடந்ததை கவனிக்கலாம். பீஜிங் அபிவிருத்தி வேலைகளை விரைந்து செய்த போது இலங்கை அரசாங்கமும் அதே வேகத்தில் செயற்பட்டது.
புலம்பெயர்ந்தோர் தனிப்பட்ட முயற்சியாக, தமது உறவினர் ஒருவரின் அநாதையாக விட்ட பிள்ளைக்கு ஆதரவு செய்வது கூடுதல் திருப்தியை அளிப்பதாக இருக்கும். தாம் புலம்பெயர்ந்து வாழ்விடம் பெற்றுள்ள வசதியான நாடுகளிலிருந்து இவ்வாறு உதவி செய்வதை விட தாய் நாட்டுக்கு திரும்பி போய் செய்வது கூடுதல் பெறுமதியானதாக இருக்கும். தமது நாட்டிலிருந்த காலத்தில் அனுபவித்தவை பற்றி சிலாகித்து பேசும் அனுபவசாலிகள், நீண்ட கால விடுமுறையில் தமது நாட்டுக்கு போவது பற்றி யோசிக்கலாம். வேறு நாட்டில் ஆசிரியர்களாக பணிபுரியும் படித்தவர்கள், தமது மேலதிக நேரத்தை யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற இடங்களில் விசேட வகுப்புகளை நடத்துவதனால் தமது வருங்கால சந்ததியினரை எதிர்காலத்துக்காக வலுப்படுத்த முடியும்.
யுத்த காலத்தில் கற்பித்தலின் தரம் குறைந்த போயிருக்கும். மேலே கூறியது போன்ற புலம் பெயர்ந்தோரின் செயற்பாடுகள் நன்மை தரும். இதை அந்தப் பிரதேசத்து ஆசிரியர்களுடன் இணைந்து திட்டமிட்டு செய்ய வேண்டும்.
இது புலம்பெயர்ந்த வைத்தியர்கள் தாதியாருக்கும் பொருந்தும். இவர்கள் தமது சொந்த கிராமத்தில் வைத்திய முகாம்களை நடத்தலாம். இது தொடர்ந்து நடக்கும் வகையில் இலங்கையில் சிலர் இணைப்பு செய்ய வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் யுத்தத்தால் அழிந்த பிரதேசத்தில் விடப்பட்டிருக்கும் துரதிர்ஷ்டசாலிகளுக்கு அன்றாட வாழ்வினை சிறப்பித்தல், உதவி வழங்கல் என்ற வகையில் செய்யக் கூடியவை உள்ளன. இதற்குத் தேவையானதெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கும் திறன், முயற்சி என்பவையே.
தமிழ் அரசியல் சமூகம் என்ன செய்ய முடியும்?
தமிழ் அரசியல் சமூகம் கீழ்மட்ட அதிகாரிகளுடன் அல்லது கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது இடை நிலையில் உள்ள மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் போன்றோருடன் நெருங்கி பழகுவதனால், அடி நிலையில் முன்னேற்றங்கள் தொடர்பாக தமது மக்களுக்கு செய்யக்கூடிய பல காரியங்கள் உள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசனதுரை சந்திரகாந்தன் பெரிதாக சாதித்ததாக கூறமுடியாதெனினும், அவர் முயற்சி செய்யவில்லை எனவும் கூற முடியாது? மத்தியிலோ, மாகாணத்திலோ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூகத்தின் சில பகுதியினருக்கோ, அதிகாரம் இல்லாத நிலையில், அவர்கள் அதிகாரத்திலுள்ள தமிழ் அமைச்சர்கள் இருப்பதை அங்கீகரித்து, தமது மக்களுக்கு உதவியையும் ஆறுதலையும் பெற்றுக் கொடுக்க, இவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் தலைவர்களிடையே காணப்படும் அரசியல் கருத்து வேறுபாடுகள் தமது மக்களின் பொதுவான நலனுக்காக இணைந்து வேலை செய்வதற்குத் தடையாக இருக்கக் கூடாது. இது இவர்களின் பன்முகப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமைச்சர் தேவானந்தாவினை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். மற்றவர்கள் கருத்தில் எடுக்கதக்களவு இல்லையென தட்டிக் கழித்த போதிலும், இவர் அமைச்சராக இருந்து தன்னிடம் உதவி கோரி வந்தவர்களுக்கு அமைச்சர் என்ற வகையில் உதவிய காரணத்தால், அவர் தனது நாடாளுமன்ற அங்கத்துவத்தை காப்பாற்றியதோடு மட்டுமன்றி, மேலும் இரண்டு இடங்களை கட்சிக்குப் பெற்றுக்கொண்டார்.
அண்மைக் காலமாக நன்மையான ஒரு செல்நெறி தென்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளையிட்டு ஜனாதிபதி, அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருடன் எழுத்து மூல தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை அணுகிவருவதாகவும் தெரிகின்றது. அவரது அரசியல் கணிப்பீடு எப்படியிருந்த போதிலும், இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மேலும் மேலும் உயரும் ஆசையுள்ளவர் என்ற வகையிலும், போரால் அழிந்த இடங்கள் பற்றி அக்கறை உள்ளவராக நாமல் காணப்படுகிறார். தமிழ் மக்களின் உடனடி தேவை தொடர்பானது எனின், அதிகாரத்தில் உள்ளவர்களோடும் காரியத்தை சாதிக்கக் கூடியவர்களோடும் பழகும் எந்த சந்தர்ப்பத்தையும், தமிழ் அரசியல் சமூகம் தவறவிடக்கூடாது. இவர்களின் இனங்களுக்கிடையிலான,இனத்துக்குள்ளான அரசியலை பின்பு கவனிக்கலாம்.
சர்வதேச சமூகத்துடன் தொடர்புறல்
சொத்துக்கள், உயிர்களை இழந்துள்ள போதும், யுத்தத்தால் அழிந்து பிரதேசங்களில் உள்ள தமிழர்கள் தமது விழுமியங்கள், கலாசாரங்களை இன்றும் பேணிப் பாதுகாப்பவர்களாகவே உள்ளனர். இவை இவர்களின் மண்ணோடு பிணைந்தது. வெளியாட்களால் இதை விளங்கிக் கொள்ள முடியாது. இவர்களால் இதை நயக்கவும் முடியாது. எனவே சிங்கள சமூகத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் என்ன தேவை உள்ளது என்பதை, (மக்களிடம் என்ன இல்லை என்பதையல்ல) எடுத்துக் கூறுவது அரசியல் பேச்சாளர்களின் கடமையாகும். உணவு, வதிவிடம், கல்விவாய்ப்புகள், வேலை வாய்ப்பு என்பவை தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்கள் செய்ய விரும்புவது நிறைய உண்டு.
இந்தியா இந்த நாடுகளில் ஒன்றாகும். அடிநிலை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளதனால், இலங்கை அரசாங்கத்தின் ஊடாக நிவாரணங்களை அனுப்புவதில் இந்தியாவுக்கு தயக்கம் இருக்கவில்லை. நிவாரணங்களை வழங்குவதன் அரசியல், தொடர்ந்து கொண்டு இருப்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு விருப்பத்துக்குரியதாக உள்ளது. இது அவர்களது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளது. இதனால் மீண்டும் இவர்கள் சிங்கள தீவிரவாதிகளுக்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்கின்றனர். இதனால் இவர்கள் தமது மக்களுக்காக எதையும் பதிலுக்கு செய்ய முடியாதவர்களாகிவிடுகின்றனர்.
வேறு பல நோக்கங்கள் இருந்தாலும், இடம்பெயர்ந்தோருக்கான இந்திய உதவிகளின் விநியோகத்தை மதிப்பீடு செய்வது, வெளிநாட்டு செயலாளர் நிருபாமா ராவின் அண்மைக் கால இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாக இருந்தது. இடம்பெயர்ந்தோருக்கான இந்திய உதவிகள் அல்லது நிவாரணப் பொருட்கள் உரிய இடத்தைவிட வேறு பகுதியினருக்கு குறிப்பாக வறுமைப்பட்ட சிங்கள மக்களுக்கு சேர்வதாக பெரிய முறைப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்கள் ஊடாக, தமிழ் அரசியல் தலைவர்கள் பொதுவாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பாகவும் அந்தந்த நாட்டு அரசாங்கங்களை, தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வு, மீள்கட்டமைப்பு உதவிகளை–முகவர் நிறுவனங்களுடாகத்தான் உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையை வலியுறுத்தாமல்- வழங்க முன்வருமாறு செய்ய தம் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும். இந்த வெளிநாடுகளும் கொழும்பில் அல்லது டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் செய்வது போன்று உதவிகள் பற்றிய மதிப்பீட்டை அந்தந்த இடத்தில் போய் காலத்துக்கு காலம் மதிப்பீடு செய்யலாம். பிரதான நோக்கம் உதவி பாதிக்கபட்ட மக்களை போய் சேர்வதுதான். இது எப்படி, நடக்க வேண்டும், ஏன் நடக்க வேண்டும் என்பவற்றை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் அரசியல் சமூகத்துக்கும் புத்திஜீவிகளுக்கும் இது தொடர்பில் தமது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
54 minute ago
2 hours ago