2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி

முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 மார்ச் 23 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது.   

நாடாளுமன்றத் தேர்தலொன்று, ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதோர் அனுபவத்தை, நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம், மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன.  

ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை, மக்களுக்கு இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை விடவும், பெரிய அழிவுகளையெல்லாம் உலகம் எதிர்கொண்டிருக்கிறது.  

ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், நடத்தப்படுவதற்கான தினம், மே மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர், அறிவிக்கப்படும் என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கின்றார்.   

அதற்குள் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். இல்லாவிட்டால், பொதுத் தேர்தலுக்கான தினம், இன்னும் தூரமாகிச் செல்லும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும்.  

எவ்வாறாயினும், ஜூன் மூன்றாம்  திகதிக்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திப் போட, சட்டத்தில் இடமில்லை என்கிறார் சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட். (இது குறித்து, சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் வழங்கியுள்ள விளக்கத்தைக் அருகில், கட்டமிடப்பட்ட பகுதியில் காணலாம்).  

பெரும் சமர்  

196 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக, நாடு முழுவதும் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள், 304 அரசியல் கட்சிகள் சார்பிலும், 313 சுயேட்சைக் குழுக்கள் சார்பாகவும் களமிறங்கியுள்ளனர்.  

ஐக்கிய தேசிய கட்சி, இரண்டாகப் பிளவுபட்டுப் போட்டியிடுகின்றமையால், வேட்பாளர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகரித்திருக்கிறது. 

மறுபுறமாக, ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியாகத் தொலைபேசி சின்னத்திலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யானைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றமையானது, பல மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவுக்குச் சாதகமான நிலைவரத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மறுபுறமாக, சஜித் அணியுடன் சிறுபான்மைக் கட்சிகள் கைகோர்த்து, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால், ரணில் அணியை விடவும், சஜித் அணி, அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.  

குறிப்பாக, ரவூப் ஹக்கீம் தலைமையிலான மு.கா, ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அ.இ.ம கா ஆகியவை, சஜித் பிரேமதாஸ அணியுடன் கூட்டு வைத்து, பல மாவட்டங்களில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. 

இருந்தபோதும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், சஜித் அணியுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் களமிறங்கியுள்ளது.  

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், கடந்த முறை ஐக்கிய தேசிய கட்சி, நான்கு ஆசனங்களைக் கைப்பற்றி, முதலிடத்தைப் பெற்றது. அந்த நான்கு ஆசனங்களில், ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸுக்கு, மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அதேதேர்தலில், தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நிலையில், மிகக் குறைந்த வாக்குகளால் ஆசனமொன்றைப் பெறும் வாய்ப்பை இழந்தது.  

இந்த நிலையில்தான், இம்முறை அம்பாறை மாவட்டத்தில், சஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டிட வருமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை, முஸ்லிம் காங்கிரஸ் பல தடவை அழைத்த போதும், மக்கள் காங்கிரஸ் தனித்தே களமிறங்கியுள்ளது. ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழுபறியே, சஜித் கூட்டணியுடன் இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட முடியாமைக்கான காரணமாகும் என்று, மக்கள் காங்கிரஸ் கூறுகிறது.  

அதாவுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்  

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் தரப்பினர், இறுதி நேரத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

அம்பாறை மாவட்டத்தில், பொதுஜன பெரமுனவின் ‘மொட்டு’ சின்னத்தில் அதாவுல்லாஹ்வும் அவரின் அணியைச் சேர்ந்த இருவருமாக, மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்பதுதான், இறுதிவரையிலான பிரசாரமாக இருந்தது. 

ஆனால், மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள், மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதை, பொதுஜன பெரமுன தரப்பைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க விரும்பவில்லை. அதனால், இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்க முடியும் என, அதாவுல்லாஹ் தரப்புக்கு கூறப்பட்டது. இதற்கு அதாவுல்லாஹ் ஒத்துப் போகாமால், தனது தேசிய காங்கிரஸ் கட்சியில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்து, வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.  

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ், அரசியலில் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றியடைந்தவுடன், அரசியலில் மீண்டும் அதாவுல்லாஹ் உற்சாகமானார்.  

இதையடுத்து, அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாஹ்வுடன் மாற்றுக் கட்சிக்காரர்கள் பலர் இணைந்து கொண்டனர். சாய்ந்தமருது பிரதேசம், அதாவுல்லாஹ்வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாஹ்வும் அவரின் சார்பான இரு வேட்பாளர்களுமாக மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள், மொட்டுச் சின்னத்தில் களமிறங்கி, மூவரும் வெற்றியடைவார்கள் என்று, அதாவுல்லாஹ் அணி பிரசாரம் செய்தது. 

இந்த நிலையில்தான், அதாவுல்லாஹ் எதிர்பார்த்த மூன்று வேட்பாளர் ஆசனங்களை, அவருக்கு வழங்குவதற்கு பொதுஜன பெரமுன மறுத்தது. இத்தனைக்கும் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளில், அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலைவரமானது, அதாவுல்லாஹ்வுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. “பொதுஜன பெரமுனவிடம், தனக்கான மூன்று வேட்பாளர் ஆசனங்களையே பெற்றுக்கொள்ள முடியாதவர், அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான தேவைகளை எவ்வாறு, பெற்றுக் கொடுக்கப் போகிறார்” என்று, அதாவுல்லாஹ்வுக்கு எதிரானவர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.  

அம்பாறை மாவட்டத்தில், அதாவுல்லாஹ்வுக்கு இவ்வாறானதோர் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், திருகோணமலை மாவட்டத்தில், அவரின் தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இது, அடிமேல் அடிவிழுந்த நிலையை, அதாவுல்லாஹ்வுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய காங்கிரஸின் திருகோணமலைக்கான வேட்புமனுவில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்தத் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில், அம்பாறை மாவட்டத்தில், அதாவுல்லாஹ் தரப்புப் போட்டியிட்டிருந்தால், ஆகக்குறைந்தது ஓர் ஆசனத்தையாயினும், அவர்கள் வென்றெடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்கள் தனித்துக் களமிறங்கியுள்ளதால், ஓர் ஆசனத்தையாயினும் வெல்வார்களா என்கிற கேள்வி, தற்போது எழுந்துள்ளது.  

கடந்த பொதுத் தேர்தலில், அதாவுல்லாஹ் தோல்வி அடைந்தமைக்கு, அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டமை, முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதாவுல்லாஹ்வுக்கான வாக்குகளில் கணிசமானவற்றை, அந்தத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. 

அதேபோன்றதொரு தேர்தல் களம்தான் தற்போதும் உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில், அ.இ.ம. கா தனித்துப் போட்டியிடுவதால், அதாவுல்லாஹ்தான் இம்முறையும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.  

மக்கள் காங்கிரஸ் தாண்டிய தடை  

இது ஒருபுறமிருக்க, அங்கிகரிக்கப்பட்ட 70 அரசியல் கட்சிகளில், சில கட்சிகளுக்கு இம்முறை, தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம், தேர்தல்கள் ஆணைக்குழுவால் மறுக்கப்படும் சூழ்நிலை இருந்தது. அவ்வாறான கட்சிகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பெயரும் இருந்தது.  

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி, சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதால், இம்முறை அந்தக் கட்சிக்கு, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம், மறுக்கப்படும் நிலை காணப்பட்டது.  

இதனால், வை.எல்.எஸ். ஹமீட் உடன், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதீன் சமரசப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டார். அந்தப் பேச்சுவார்த்தை, வெற்றியளித்தது. அதைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, எழுத்துமூல ஒப்புதல் ஒன்றை, ஹமீட் வழங்கினார். அதன் காரணமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடை நீங்கியது.  இதேவேளை, மக்கள் காங்கிரஸுடன் சமரசம் செய்து கொண்ட ஹமீட், அம்பாறை மாவட்டத்தில், அந்தக் கட்சி சார்பில், எதிர்வரும் தேர்தலில் பிரதம வேட்பாளராகப் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

பிரிவும் இணைவும்  

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து சஜித் தலைமையிலான கூட்டணியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு மறுத்து, அந்த மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்து, தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த இணைவைப் பலரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.  

முஸ்லிம் அரசியலரங்கில் அநேகமாக எதிர் அரசியலில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், கூட்டணியமைத்துத் தேர்தலில் களமிறங்கும் இவ்வாறான ஆச்சரியம், இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கிறது. ஊவா மாகாண சபைக்கான கடந்த தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து இட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டமை நினைவுகொள்ளத்தக்கது.  

புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை வென்றெடுக்க வேண்டும் என்றும், அதற்காக முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் எனவும் தெரிவித்து, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் அங்குள்ள இஸ்லாமிய உலமாக்கள் பேச்சு நடத்தியமையால்தான், அந்த மாவட்டத்தில், இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் நிலைவரம் உருவாகி உள்ளதாகத் தெரியவருகிறது.  

அதற்கமைய, ‘முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு’ எனும் கட்சியின் தராசு சின்னத்தில், முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.  

தராசு சின்னத்தைக் கொண்ட மேற்படி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளராக, எம். நயீமுல்லா பதவி வகிக்கின்றார். இவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய மச்சான் (மாமி மகன்) என்பதோடு, மு.கா தலைவர் அமைச்சராக இருந்தபோது,  அவரின் பிரத்தியேகச் செயலாளராகவும் பதவி வகித்தார்.   

சேர்ந்தும் பிரிந்தும் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தவர்களும் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வாறு போட்டியிடும் நிலையில், கடந்த முறை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்ட 21 நாடாளுமன்ற ஆசனங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.  

‘முடியாது’ என்கிற அச்சத்தால்தான், இந்தக் கேள்வி எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வது, ஒன்றும் சிரமமானதல்ல.    

பொதுத் தேர்தலை ஒத்தி வைத்தல் - சட்ட விளக்கம்

“தேர்தலை ஒத்தி வைப்பதற்கு இருக்கின்ற நேரடியான சட்ட ஏற்பாடு,  நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம், ஜனாதிபதியால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது” என்று, சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவிக்கின்றார்.  

தேர்தல் ஆணைக்குழு, ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம்; முழு நாட்டிலும் ஒத்திவைக்க முடியாது. ஆனாலும், சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செயற்கையான ஒரு வியாக்கியானத்தின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக வர்த்தமானி வெளியிடுவதன் மூலம், முழுநாட்டுக்கும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.  

அவ்வாறு செய்தால், நீதிமன்றில் அதைக் கேள்விக்கு உட்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் யாரும், அதைச் சவாலுக்கு உட்படுத்தும் சந்தர்ப்பம், குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  

இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தி 24(3) ஐத் திருத்தி, முழுநாட்டிலும் ஒரே வர்த்தமானியால் தேர்தலை ஒத்திவைக்க, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கலாம். அல்லது, தனக்கே அந்த அதிகாரத்தை வழங்கி, தேர்தலை ஒத்தி வைக்கலாம் எனவும் ஹமீட் கூறுகின்றார்.  

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில், சட்ட முதுமாணி ஹமீட் வழங்கியுள்ள சட்ட விளக்கம் வருமாறு:  

ஜனாதிபதி  நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்தல்  

நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியாக, மே மாதம் 14 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால், அதற்கு முன்னர், தேர்தல் நடத்தியாக வேண்டும். அல்லது, நாடாளுமன்றம் கூடும் திகதியை, ஜனாதிபதி ஒத்திப்போடலாம். ஆனால், ஜூன் மூன்றாம் திகதிக்குப் பிந்தாத வகையில், அது அமைதல் வேண்டும். அவ்வாறு ஒத்தி வைத்தால், அதற்கு ஏற்றாற்போல் தேர்தலையும் ஒத்திவைக்கலாம்.  

ஜூன் மூன்றுக்குப் பின்னர் ஒத்தி வைத்தல்  

இதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை. இருக்கும் ஒரேவழி doctrine of necessity தான். அதாவது, சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத, எதிர்பாராத ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும்போது பாவிப்பது.  

உதாரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதியைப் பதவி விலகக்கோரி, தொடர் போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியும் பதவி விலகுவதாக இல்லை. போராட்டம் மிகமோசமான கட்டத்தை அடைந்தது. ஆனால், அவரை நேரடியாக நீக்குவதற்குச் சட்ட ஏற்பாடுகளும் இல்லை.  

இந்நிலையில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம், இந்த doctrine of necessity ஐப் பாவித்து, அவரைப் பதவி நீக்கம்செய்து, உபஜனாதிபதியை, ஜனாதிபதியாக நியமித்தது.  இலங்கை வரலாற்றில் doctrine of necessity பாவிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.  

அரசமைப்பைத் திருத்துதல்  

கலைந்த நாடாளுமன்றத்தைக் கூட்டி, அரசமைப்பைத் திருத்தமுடியாது. அதேநேரம், ஜூன் மாதம் மூன்றாம் திகதிக்குப் பின்னர், தேர்தலை நடத்துவதை அரசமைப்புத் தடுப்பதால், doctrine of necessity இன் கீழ் நீதிமன்றை நாடுவது ஒருமுறை.  

மறுபுறம், கலைந்த நாடாளுமன்றத்தைக்கூட்டி, ஜூன் மூன்றுக்குப் பிறகு, தேர்தலைப் பிற்படுத்த முடியாத தடையை நீக்க, doctrine of necessity இன்கீழ் அரசமைப்புக்குத் தற்காலிக திருத்தம் கொண்டுவர முடியுமா? என முயற்சித்துப் பார்க்கலாம். ஆனாலும் உயர்நீதிமன்றம் அதனை அனுமதிக்க வேண்டும்.  

doctrine of necessity என்பதே, சட்ட ஏற்பாடுகள் இல்லாத சமயத்தில், இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாளச் சட்டங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டுச் செய்யும் ஏற்பாடுகள்தான்.  

எனவே, ஜூன் மூன்றுக்கு அப்பாலும் தேர்தலை ஒத்திவைத்தல், சாத்தியப்படலாம். ஆனாலும், தற்போதைய சட்டத்தின்கீழ் அதற்கு இடமில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X