2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அதிரன்

அரசியல் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். 

இன்றைய காலத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடச் சாப்பாட்டைக்கூட நினைக்க முடியாத அளவுக்கு, அரசியலின் ஆதிக்கம் வியாபித்திருக்கிறது.

திருக்குறளில் பல தலைப்புகளில் அரசியல் விவரிக்கப்பட்டுள்ளது. பொருட்பாலில் அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் 450 குறள்கள் கூறுவதும் அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது. 

சாணக்கியர், தொல்காப்பியர் காலம் தொடங்கி, திருக்குறள் காலம் தாண்டி, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியல் வளர்ச்சி பெற்றிருக்கிறதே தவிர, அழிந்துவிடவில்லை. 

மேலை நாடுகளின் மொழிகள், கீழைத்தேச மொழிகள் என, அனைத்து மொழிகளிலும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, எதுவுமே நடைபெற்றுவிடவில்லை என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. அந்த வகையில், அரசியல் தத்துவம் முன்கொண்டு செல்லப்படுவதாகவே இருக்கிறது. இது வரலாறாகும்.

நவீன காலத்தில், அரசியல் கட்சி என்பது, அரசாங்கத்தின்  அதிகாரத்தை அடைவதையோ அல்லது, வெளியில் எதிர்பினைக் காண்பிக்கின்ற அதேவேளை, அரசாங்கத்தை வழி நடத்துகின்ற தரப்பாக இருந்து கொள்ளும்  நோக்கம் கொண்டு உருவாக்கப்படும் அமைப்பாகவே காணப்படுகிறது. 

அரசியல் கட்சிகள் பொதுவாக, ஒரு வெளிப்படையான கொள்கையையோ, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கத்தையோ பொதுவில் கொண்டிருக்கின்றன.

அரசியல்க் கட்சிகள், தமது கொள்கைப் பிரகடனங்களை, தேசிய மகாநாடுகளைக் கூட்டி, வௌிப்படுத்திக் கொள்கின்றன. இது  தேர்தல் நோக்கத்திலும், எதிர்கால அரசியல் நோக்கம் சார்ந்தும் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களாகவே இருக்கும். 

இவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு, அரசியல் பாலம் அமைக்கப்படுவதுடன், அரசாங்கத்துக்கும் ஏனைய கட்சிகளுக்கும் கூட, இவற்றின் அதிர்வு கொண்டு செல்லப்படும். 

கடந்த சனிக்கிழமை (29), ஞாயிற்றுக்கிழமை ஆகிய வாரத்தின் இறுதி இரண்டு நாள்கள், மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 10ஆவது  தேசிய மகாநாடு, இந்த வகையிலமைந்த ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொண்டதிலிருந்து, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் எதுவுமே, தீர்வைப்பெற்றுத் தந்து நிறைவடைந்ததில்லை. அதுபோன்று, 1978களிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம், 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது. என்பது, மனத்தைக் கனக்கச் செய்யும் ஒன்றாகவே கொள்ளப்படுகிறது.

இருந்தாலும், தொடர்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு, ஊடாகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறிவிட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுப்பதே, இப்போதுள்ள அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் சேவையாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும்.

இராஜதந்திர ரீதியாக, சர்வதேசத்தை நம்பிக்கொண்டு, அரசியல் நடத்தும் நிலைமை, இப்போது இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் ஆகியிருக்கிறது.இதன் வெளிப்பாடு, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 10ஆவது தேசிய மகாநாட்டில் வெளிப்பட்டதைக் காணமுடிந்தது. 

இது ஒன்றும் புதிதாகத் தோன்றிய விடயமில்லை. என்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் முதல், தொடர்ந்தும் அதில் அங்கம் வகித்துவரும் கட்சி என்ற வகையில், டெலோ அமைப்புக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தில் முக்கிய பங்கு இருக்கிறது. 

அந்தப் பலத்தின் ஊடாகத் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதற்கும் அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான, புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்குமான நடவடிக்கைககளை முன்னிலைப்படுத்துவதும் முக்கியமானதாக இருக்கிறது.

அதேவேளை, தமிழர்களின் அரசியல் வரலாறானது துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள், கொலைகள், படுகொலைகள் என்று நீண்டு சென்றதற்கு, தமிழ் அரசியல் கட்சிகள் மீதான, அத்து மீறிய அநியாயங்களும் காரணங்களாக இருந்திருக்கின்றன. 

இதன் அடிப்படையில், தமிழ்த் தேசியம் என்றும் தமிழ்த் தேசிய எதிர்ப்பென்றும் உருவாக்கப்பட்ட இரு தரப்புகள் இப்போது இணைந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தை உள்ளடக்கிய தீர்மானம் டெலோவின் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாகாண அரசு ஆகிய நிர்வாகக் கட்டமைப்புகளால் அதிகாரம் பிரயோகிக்கப்படும் வகையில், சமஷ்டிக் கட்டமைப்பை உருவாக்கமுடியாதா என்ற  விடயம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த பேசுபொருளாக இருக்கிறது. 

2007இல் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னரான காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. இக்கால கட்டத்தில் புலம்பெயர்ந்த, துறைசார் தமிழ் உறவுகளும் இவ்விடயத்தில் கைகொடுத்தனர். இப்போதும் அவர்கள் தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம்தான் இருக்கின்றனர்.  ஜனாதிபதி நியூயோர்க்கில் பேசிவிட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், அரசாங்கம் விரைவு காட்டவில்லை என்ற உண்மையை அனைவரும்  உணர்ந்திருக்கின்றனர். இருந்தாலும், இன்னமும் அதற்கான சரியான உந்துதலைக் கொடுப்பதில், தமிழ்த் தரப்பு தவறியிருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரசமைப்புச் சபை உருவாக்கத்தின் பின்னர், நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. விரைவில் அரசமைப்புப் பேரவை, இது தொடர்பான அமர்வை ஆரம்பிக்க இருக்கிறது. இந்த அமர்வுகளின் ஊடாக, புதிய அரசமைப்பு உருவானால் நல்லதே. 

இலங்கைத் தமிழ் மக்களுக்கு, சிறப்பான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய, தற்போதையை நிலைமையில் அடையக் கூடிய அதியுச்ச அடைவாக இருக்கும் என்ற அடிப்படையில் அதனைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. 

இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு, சமஷ்டிக் கட்டமைப்பிலான ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என்ற தொடர் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுமா என்ற கேள்வியை மாத்திரம் கேட்டுக் கொள்ள முடியும்.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்படுகின்ற ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படுகிறதா என்றால், இல்லையென்று பதில் கிடைப்பதுபோல், எல்லா விடயங்களுமே இருந்துவிடக்கூடாது என்றுதான் மக்கள் எல்லோரும் நினைக்கிறார்கள். அரசியல்வாதிகள், நிறைவேற்ற முடியாதவற்றைச் சொல்பவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான், நியாயமான அரசியலாகும்.

‘சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ‘ஏக்கிய இராச்சிய’ (ஒருமித்த நாடு) என்னும் குடியரசாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் தொடக்கத்துக்கே முடிவு கிடைக்காமல், இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் கேள்வியாகிக் கொண்டிருக்கையில், நடைபெற்றிருக்கின்ற டெலோவின் தேசிய மகாநாடு கொடுத்திருக்கின்ற எதிர்வினைகள், முடிவுகளை எட்டவேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.

“இலங்கையின் அரசியல் வரலாற்றில் சர்வதேசத்தினுடைய மேற்பார்வை என்பது, இலங்கை அரசாங்கத்தின் கைகளைக் பிடித்து, தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வை எழுதித் தரும் தன்மையுடையதல்ல; இணக்கப்பாடென்பது நாட்டுக்குள்ளே தான் ஏற்பட வேண்டும். அந்த இணக்கப்பாடு, மிக நுணுக்கமாக, நிதானமாக, எதிர்மறையான சக்திகள் வெளிக்கிளம்பாத வகையிலானதாக அமையக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தச் செயற்பாடுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கிறது” என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

சமஷ்டிக் கட்டமைப்பிலான தீர்வை பெற்றுக் கொள்வதுதான் எமது இலக்கு என்று சொல்லிக் கொண்டு,  செய்யப்படும் நடவடிக்கைகளில் மக்கள் எவ்வளவுக்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதில்தான் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. புதிய அரசியல் கட்சிகளும், முன்னாள் அரசில்வாதிகளும் தமிழ் மக்களைத் திசை திருப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும், தமிழ்த் தேசியத்திலிருந்தான  விலகல்களும் ‘வெண்ணெய் திரண்டு வரும் சந்தர்ப்பத்தில் தாழியை உடைக்கும்’ செயற்பாடாகவே கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் சார்ந்து, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வில், இதுவரை எட்டப்பட்டுள்ள விடயங்களை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு தமிழ் மக்கள்சார் தரப்புகளின் அறிவு, ஆற்றல், செல்வாக்கு எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதே டெலோவின் மாநாட்டின் பின்னரான, செயற்பாட்டு முன்னேற்றமாக இருக்க வேண்டும்.

மக்களாட்சி வழியிலான அரசியலில், அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு கடமைகள் இருந்தாலும், இவை மக்களாட்சி முறையை நிலைத்திருக்கச் செய்யவும், அதைச் சிறப்பாக செயற்படுத்தவும் பெரிதும் உறுதுணையானதாக இருக்க வேண்டும். 

கட்சிகளின் நலன்சார்ந்த வேறுபட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைசார் போராட்டத்துக்கான தீர்வொன்றே இலங்கையின் அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற வகையில், ஒற்றுமையுடனான செயற்பாடு முன்கொண்டு செல்லப்படவேண்டும்.

தமிழினத்தின் பேராதரவுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், தேசியப் பிரச்சினையாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை ஒரே நாடு என்ற வரையறைக்குள் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக் கூடியதும் தமிழ் மக்களின் மரபுகளின் தாயகமான இணைந்த வடக்கு, கிழக்கு மாநிலத்துக்கு பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்பது எதிர்பார்ப்பான விடயமே.

டெலோவின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரகடன அறிவிப்பை மேற்கொள்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, சமஷ்டி எனப்படும் இணைப்பாட்சி முறையை ஏற்படுத்துவதற்கான, அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு முன்வைக்க அரசாங்கம் தவறுமிடத்து, அரசாங்கத்துக்கு, கடந்த மூன்று ஆண்டு காலமாக எமது கட்சியும், அது அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தில் அளித்துவரும் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையில், அரசியல் தீர்வு தொடர்பான, சகல யதார்த்த பூர்வமான விடயங்களையும் கவனமாகவும் ஆழமாகவும் பரிசீலித்து இந்த மாநாடு தீர்மானிக்கின்றது என்றார்.

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பால் அளிக்கப்பட்டு வரும் ஆதரவை முடிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவுக்குச் சாத்தியம் என்று கேட்டுக் கொள்ளலாம்.

அதேபோன்று, தமிழினத்தின் தாயகத்தில் செயற்படும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒரே அணியாகச் செயற்படுவதன் மூலமே ஒன்றுபட்ட தமிழ்த் தேசிய அரசியல் பலத்தின் ஊடாக, எம்மக்களின் அரசியல் வென்றெடுக்க முடியும். இதை வலியுறுத்தி, தமிழ்த் தேசியத்தை முன்நிறுத்தி நிற்கும் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் இணையுமாறு இம்மாநாடு அறைகூவல் விடுத்தது. இந்த அழைப்புக்கு முடிவு சாதகமாக இருக்குமா?

நியாயமானதும், யதார்த்த பூர்வமானதுமான கால வரையறைக்குள் அரசியல் தீர்வொன்றை, ஒருமைப்பாட்டுக்குள் வென்றெடுக்க சாத்தியமில்லாதவிடத்து, எமது பிரச்சினையை உலக அரங்கின் முன் சமர்ப்பித்து, சர்வதேச சட்டத்தின் கீழ், தமிழ்த் தனித்தேசிய இனம் என்ற அடிப்படையில், பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில், ஐ.நா சபை ஊடாக சர்வஜன வாக்கெடுப்பை, தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று, வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நடத்தபட வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தைச் செயற்படுத்த அனைத்துத் தமிழ்த் தேசிய சக்திகளும் முன்வர வேண்டும்.

போர்க்குற்ற விசாரணை விடயத்தில், தமிழினத்தின் தரப்பில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்கோ சமரசத்துக்கோ இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் இத்தேசிய மாநாடு, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை எற்றுக் கொண்ட தீர்மானங்களை, அமுல்படுத்தத் தவறுமிடத்து, ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்று, இம்மாநாடு ஐக்கிய நாடுகள் சபையையும் வலியுறுத்துகின்றது என்று டெலோ அமைப்பு கோரியுள்ளது.

‘நியாயமான அரசியல் தீர்வுக்காக’ என்று மாற்றம் பெற்றுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைசார் போராட்டங்களின்அல்லது அணுகுமுறைகளின் தொடர்ச்சியில், இன்னும் எத்தனை காலம்தான் முற்றுப்புள்ளிக்காகக் காத்திருப்பது? 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .