2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டுமா?

Johnsan Bastiampillai   / 2017 ஜூலை 13 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டியதும் துருத்திக்கொண்டும் இருக்கும் பிரச்சினை குப்பைக் பிரச்சினை ஆகும். பொதுவாக சனத்தொகை அதிகமுள்ள எல்லா நகரங்களிலும் குப்பைப் பிரச்சினை காணப்படுகின்றது. 

சில இடங்களில் மக்கள் கிளர்ந்தெழுந்து, போராட்டங்களை நடாத்தும் அளவுக்கு இந்தக் குப்பைப் பிரச்சினையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலை யாழ்ப்பாண மாநகர சபைக்கும் இருக்கின்றது. கல்லுண்டாய்வெளி, பொம்மைவெளி, வீதியோரங்களில் பொறுப்பில்லாமல் போடப்படும், கழிவுகளை அகற்றாமல் விடப்படும் சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளில் மாநகரசபை வெற்றிகரமாக எதிர்கொண்டும் வருகின்றது.   

யாழ்ப்பாண மாநகர சபை குப்பை முகாமைத்துவத்தை இரண்டு வழிகளில் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றது. முதலாவது குப்பைகளை மீள்சுழற்றி செய்து இலாபம் ஈட்டுவது. மற்றையது குப்பை முகாமைத்துவத்தில் முக்கியமான குப்பைகள் சேர்வதைக் குறைப்பதும் குப்பைகளைப் பிரித்துப் போடுதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்ததல். தமது திட்டங்கள், செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் பின்வருமாறு கூறுகின்றார்.   

“யாழ்ப்பாண மாநகர சபைக்குள் 43 பாடசாலைகள் இருக்கின்றன. 43 பாடசாலைகளிலும் உள்ள சுற்றுச் சூழல் கழகங்கள் மூலம், கழிவகற்றல் தொடர்பான முறைமைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.   

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக அல்லது இதை ஒருவித ஆரம்ப அடித்தளமாக, கடந்த வருடம் பிரச்சார ஊர்தி ஒன்றை வடிவமைத்தோம். அந்த பஸ் பாடசாலைகளுக்குச் சென்று, பொலித்தீன், பிளாஸ்டிக், கண்ணாடிப்போத்தல் போன்றவற்றை மீள்சுழற்சி செய்யும் முறைகளைப் போட்டுக் காட்டுவோம்.   

மாணவர்கள் தமது சுற்றாடலில் இருந்து அவற்றை எடுத்து வந்திருந்தால், கொப்பி, பேனா, பென்சில்கள் பரிசாக வழங்கப்பட்டன. அதேபோன்று பாடசாலைக்கென வர்ண குப்பைத்தொட்டிகளும் வழங்கப்பட்டன. இவற்றைக் ​கையாழும் வழிமுறைகளும் செயன்முறை ரீதியில் காட்டிக்கொடுக்கப்பட்டன.   

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் 155 தொன் குப்பைகூழங்கள் தினமும் சேருகின்றன. ஆனால் தொழிலாளர் மற்றும் வளப்பற்றாக்குறை காரணமாக, 82 தொன் மட்டுமே ​சேகரிக்கக்கூடியதாக இருக்கின்றது. மிகுதியைப் பசளையாக வீட்டுக்பாவனைக்குப் பயன்படுத்துகின்றனர். அல்லது எரித்து விடுகின்றனர்.

அல்லது மூட்டையாகக் கட்டிவிட்டு வீதியோரங்களில் எறிந்து விடுகின்றார்கள். சேகரிக்கப்படும் 82 தொன் கழிவுகளில் 71 சத வீதமான தொன்குப்பைகள் உக்கக்கூடிய கழிவுகளாகவும் மிகுதி 11 சதவீதக் கழிவுகள், பிளாஸ்டிக், கண்ணாடிப் போத்தல்கள், றபர், உக்காத பிளாஸ்டிக் ஆகியவை இந்த வகையறாக்களுக்குள் உள்ளடங்கும்.

இவற்றை மீள்சுழற்சி செய்யும் இயந்திரங்கள் இருக்கின்றன. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்கள் அதிகம் வருவதனால் அவற்றை தட்டையாக்கி 200 கி.கிராம் நிறையுடைய கியூப்பாக்கி தெற்குக்கு அனுப்புவோம். 

அரசாங்கம், தனியார் பங்களிப்பை ஊக்குவித்தல் என்ற கொள்கையின் நிமித்தம் இந்தப் பொறுப்பு தனியார் ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

மாநகர சபையினால் உக்கும் கழிவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும், உரத்துக்கு நல்ல கிராக்கி இருக்கின்றது. தென்னோலை, பனையோலை, வாழையிலை போன்ற கழிவுகளை ட்ரக்ரர்களில் எடுத்துச்சென்று, நிலத்துக்குப் பசளையாகத் தாழ்ப்பதும் உண்டு. 

ஒருநாளைக்கு 2- 3 தொன் வரைக்குமான உக்கும் கழிவுகளையே உரமாக மாற்றக்கூடியதாக இருக்கின்றது. மீதியைக் கல்லுண்டாய் பகுதியில் குவித்து வைத்துள்ளோம். இதற்குத் தீர்வாக கவஷிமா என்ற இயந்திரத்தை இறக்குமதி செய்வதற்கான வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இயந்திரம் ஒரு நாளைக்கு 50 தொன் குப்பைகளை உரமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 

தெருவில் எறியப்படும் குப்பைகளை வகைப்படுத்திப்  பிரித்துப்போடுவதற்கு கலரில் கூடைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மக்கள் பெரிய பாக்குக்குள் கொண்டு வந்து, அதன் அருகில் வைத்துவிட்டுச் செல்வார்கள். 

அவர்கள் அதை வகைப்படுத்தாதால், எமது ஊழியர்கள் அதைச் செய்கின்றார்கள். மக்கள் உணர்ந்து செயல்ப்பட்டால் மாநகர சபையின் சில,  இதுபோன்ற வீண்செலவுகளைக் தவிர்த்துக்கொள்ள முடியும். அந்தப் பணத்தை வேறொரு அபிவிருத்தித் திட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். 

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, ‘கழிவுகளைத் தரம்பிரிப்பீர்; முகாமை செய்வதில் கரம்கோர்ப்பீர்” என்ற வாசகங்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   

யாழ்ப்பாண மாநகர சபை பெரியளவில் குளங்களைச் சுத்திகரிப்பில் ஈடுபடவில்லை. காரணம், உலக வங்கி குளங்கள், வாய்க்கால்களைத் புனரமைப்புச் செய்வதற்குத் ஐந்து வருடத்  திட்டத்தின் கீழ், 18.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும் 400 குளங்களில் நகர்ப்பகுதிக்குள் அமைந்துள்ள 48 குளங்கள், ஒரு குளத்தில் நீர் தேங்கி, நிறைந்து மற்றைய குளத்துக்குச் செல்லும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை முறையாகத் தூர்வாரி, குளங்களில் நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும். 

தற்சமயம் பார்த்தீர்களானால் ஒரு மழைக்குப் பிறகு, வாய்க்கால்களில் இருக்கின்ற மண்ணை வெட்டி எடுக்கின்றார்கள். இது சாதாரணமான நிலைமையில் அகற்றுவதுபோல் அகற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு லெவல் பார்த்து, கொம்பொஸ் பண்ணி, சீமென்ட் போடுற வேலையை நாங்கள் இப்போது செய்யப்போவதில்லை. கடந்த 30 வருடங்களாக லெவலிங் செய்கிற படியால் அது அழிந்துவிட்டது. திருப்பிச் செய்ய, அந்த லெவலிங் எல்லாம் மாஸ்டர் பிளானில்தான் வரும். 

அனர்த்த முகாமைத்தவத் திணைக்களத்திடம் இருந்து மழைவீழ்ச்சி, வௌ்ள அனர்த்தம் தொடர்பான புள்ளிவிவரங்களை உள்வாங்கியே இந்த மாஸ்டர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமாக யாழ்ப்பாண மாநகர சபையில் இருக்கின்ற தொழிலாளர்  வேலையாள் தொகுதியில், 35 - 45 சதவீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் விடுமுறைபெற்று விடுகின்றார்கள். மாறிமாறி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் நிரந்த ஊழியர்களைவிட, தேவைக்கேற்ற தொழிலாளர்களிலிருந்து  தேவைக்கு ஏற்றமாதிரி எடுத்துக்கொள்வோம். 

எங்களிடம் இருக்கின்ற மனித வளத்தினால் இது சாத்தியமில்லை. எனவே அரசாங்கம் ஊக்குவிக்கும் தனியாரை அடையாளம் கண்டு கையளிக்கும்போதுதான் இவை சாத்தியமாகும். 

குறிப்பாகப் பார்த்தால் நகரத்தில் உள்ள கடைகள், றெஸ்ரோறன்ட், கொட்டல்கள் போன்றவற்றிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கு நாங்கள் தனியாரிடம் தான் கொடுத்திருக்கின்றோம். 

வழமையாக சிலவேளைகளில் குப்பை அகற்றப்படவில்லை என்றால் கடைகளில் இருந்து “கடைக்குள் குப்பை தேங்கிப்போய் இருக்கிறது; கஸ்டமர் வரும்போது பிரச்சினை” என்று தொலைபேசி அழைப்பு வரும். ஆனால் தனியாரிடம் கையளித்த பின்னர் அழைப்பு வருவதில்லை.  

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைமுறையின் படி, அவர்கள் குப்பைகளைத் தேடித்தேடி அப்புறப்படுத்தும்போதெல்லாம்,   அரை பரல் குப்பை எடுத்தால் 240 ரூபாய் வழங்கப்படுகிறது. 

 இதைவிட குப்பைகளை உருவாக்குவோரும் அதனைக் குறைக்க வேண்டும். பொதுவாக சாப்பாட்டுக் கடைகளில் லஞ்சீட் பாவிக்கிறதைத் தடைசெய்யலாம். ஏனென்றால், லஞ் சீற்றில் சோறு கறிகள் ஒட்டியிருக்கும் என்பதால் பிரித்தெடுப்பது கடினம். 

இப்படிச் சொல்லிச் சொல்லி, மக்களிடம் நல்ல மாற்றம் தென்படுகின்றது. 
சொப்பிங் பாக் பாவனையை மாகாண விவசாய அமைச்சும் சுற்றாடல் அமைச்சும்  மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் 22 ஆம் திகதி,  சர்வதேச புவி தினத்தன்று  பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் என்ற வாறான தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்தி வருகின்றார்கள். அரசாங்க நிறுவனம், பாடசாலைகள் எல்லாம் சேர்ந்து உறுதிமொழி எடுத்திருக்கின்றார்கள்; இதை முடிந்த மட்டிலும் நடைமுறைப்படுத்துகின்றார்கள்.   

எங்கட அலுவலகத்தில் பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்க மாட்டோம்; எங்க பாடசாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பாவிக்க மாட்டோம் என்று  தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள். அண்மையில் ஒரு கடையில் விசாரித்தபோது, பிளாஸ்ரிக் பொருட்களின் விற்பனை குறைந்திருப்பதாக கூறினார்.


ஏனென்றால் வாங்குகின்ற ஆக்கள் குறைந்து விட்டார்கள். நேரடியாக அதை தடைசெய்யாமல்  மறைமுகமாக நாங்கள் எங்களுடைய பழக்க வழக்கங்களை மாத்தினால்த்தான் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீளலாம்” என்றும் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.  

யாழ்ப்பாண மாநகர சபை 20.2 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளைவைக் கொண்டதுடன் 23 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருப்பதுடன் 92 ஆயிரம் மக்கள் வாழுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X