2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெலிக்கடை சிறையில் பொலிஸார் மீது தாக்குதல்; 50 பேர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை சிறைக் கைதிகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 பொலிஸார் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்ட பொலிஸார் மீதே மேற்படி கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சிறைக்கூடங்களில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்குள்ள சிறைக்கூடங்களிலிருந்து சுமார் 4ஆயிரம் கைதிகள் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சிறைக்கைதிகளினால் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 500 அதிகாரிகள் வரையில் கைதிகளினால் இதன்போது தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 50பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தற்போது இந்த மோதல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

46 பொலிஸ் உத்தியோகத்தர்கள், இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 50பேரே இவ்வாறு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் படுகாயங்களுக்கு உள்ளானோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேற்படி பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தலை, மார்பு மற்றும் அடிவயிறு போன்ற பகுதிகளிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தொடர்பான மருத்துவ விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் உட்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்தும் சிறைக்கூடங்களில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதான சிறைக்கைதிகள் இருவரை பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 08 November 2010 08:40 PM

    வெலிகட சிறைச்சாலையை இடமாற்றம் செய்யப்படுவதாக ஓர் அறிக்கை முன்பு வந்தது. அப்போது நான் இம்மாதிரியான ஒரு சம்பவத்தை முற்கூட்டியே கற்பனை செய்து எழுதினேன். அதை ஆசிரியர் நீக்கி விட்டார் என்று நினைக்கின்றேன், இப்போது அவ்வாறான செயல் நடந்துள்ளது. எனது ஹேஷ்யம், எதிர்வு சரி என்பதை இப்போது அறிவாராக!
    ஆனால் நான் கூறி இருந்தேன் இம்மாதிரியான சம்பவம் இடம் மாற்றினாலும் நடக்கும் என்று
    எங்கே தான் இடம் மாற்றப்போகின்றனர் எல்லா இடமும் ஒன்று தான்!
    அதற்கு முன்னோடி ஒத்திகை தான் இதுவோ, சிறைச்சாலை அதிகாரிகள் & பொலீஸ் மோதல்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .