2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிபியா மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் லிபியா மீது நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மாத் தொழுகைக்கு பின்னர்  பல்வேறு முஸ்லிம் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப் பொம்மை மற்றும் பராக் ஒபாமாவின் கார்ட்டூன் சித்திரம் வரையப்பட்ட பதாதைகளுக்கு செருப்புக்களால் அடித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுடன், அப்பதாதைகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.  

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலிலிருந்து, அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டபோதிலும் காலி வீதியில் பொலிஸார் தடுப்பு வேலிகளை அமைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்லவிடாது தடை விதித்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த  ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்,

'அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவ்வாறான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும'; என்றார்

'எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விடயத்தில் அமெரிக்கா நடந்து கொண்ட முறைமை வேறானது. லிபியாவின் விடயத்தில் அமெரிக்கா நடந்துகொள்ளும் முறைமை வேறானது.  

பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இது குறித்து அமெரிக்கா எந்தவித அக்கறையும் கொள்ளுவதில்லை.  

ஆனால், லிபியாவின் விடயத்தில் அமெரிக்கா தலையிடுகிறது. லிபியாவில் உள்நாட்டு பிரச்சினையே நிலவுகிறது.  அந்த  நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை அந்த நாட்டு மக்களே தீர்க்க வேண்டும். லிபியாவின் உள்நாட்டு பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுவதற்கான எந்தவிதமான அதிகாரமும் இல்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், வாசுதேவ நாணயக்கார பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். Pix By: Pradeep Pathirana


You May Also Like

  Comments - 0

  • siddeeq Saturday, 26 March 2011 09:40 PM

    உள்ளநாட்டுப் பிரச்சனைக்காக உள்நாட்டில் செய்யப்படும்
    ஆர்ப்பாட்டங்களுக்கு சிலவேளை தீர்வுகிடைப்பதில்லை.
    வெளிநாட்டில் தீர்வுகிடைக்குமென்பது சாத்தியமில்லாதொன்றாகி விடுகிறது.

    Reply : 0       0

    razmi Monday, 28 March 2011 01:06 PM

    இலங்கை முஸ்லிம்களை தொடர்ந்தும் அடி முட்டாள்களாகவே வைத்திருந்து தமது அரசியல் பிழைப்பை நடத்தும் வித்தையை நன்றாக அறிந்தவர்கள் நமது வீ. ஐ. பீ க்கள். அரசாங்கம் எந்தப் பக்கம் சார்ந்து இருக்கிறதோ அது தான் அவர்களுக்கு இஸ்லாம். அதற்கு நல்ல உதாரணம் அவர்கள் கையில் தாங்கி இருக்கும் பதாகை.

    Reply : 0       0

    mohammed5 Tuesday, 29 March 2011 12:15 AM

    very good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .