2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வன்புணர்வுக்குள்ளான இளம் பெண்ணின் உடல் 'ஓலையால் மூடியிருந்தது'

Gavitha   / 2016 ஜூலை 12 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

'16 வயதான பெண் பிள்ளை, கடைக்குள்தான் இருந்துள்ளார். அவரைக்கண்ட இராணுவத்தினர், கடைக்கு அருகிலிருந்த  பாழடைந்த பால்சேகரிப்பு நிலையக் கட்டடத்துக்குள் கொண்டு சென்று, வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அது, எமக்கு உடன் தெரியாது, மறுநாள் காலை வந்து பார்த்தபோது, குறித்த இளம்பிள்ளையின் உடல், பனையோலையால் மூடப்பட்டிருந்தது' என, வீரசாமி காளிமுத்து (வயது 60) என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

திருகோணமலை, கிளிவெட்டிப் பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதியன்று இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று (11), அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்றது. அங்கு சாட்சியமளிக்கும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில்,

'நான், எமது கிராமத்தில், கிளிவெட்டி - மூதூர் பிரதான வீதியில் கடையொன்றை நடாத்தி வந்தேன். சம்பவ நாளன்று வீதியில் படையினர் சுட்டுக் கொண்டு வந்தனர். அப்போது சுமார் 20 பேருக்கு மேல், பயத்தின் காரணமாக எனது கடைக்குள் வந்து புகுந்தனர். அச்சம் காரணமாக, நாம் கடைக் கதவைச் சாத்தினோம். இதன்போது கபில என்ற இராணுவத்தைச் சேர்ந்தவர், கதவு ஓட்டைக்குள்ளால் முதலில் சுட்டார். பின்னர் கதவை உடைத்து கொண்டு வந்து சுட்டார். அதன் பின்னரும் சுட்டார். அதன்போது பலரும் இறந்தனர். கடைக்குள் ஐந்து பேர் வரை இறந்தனர்.

இந்தச்சம்பவத்தில் சீரழிக்கப்பட்ட 16 வயதுப் பெண் பிள்ளையும், எனது கடைக்குள்ளேயே  ஒளிந்திருந்துள்ளார். அவ்வேளை, இறந்தவர்களைத் தவிர நாங்கள் பலர், காயம்பட்ட நிலையில் கடையை விட்டு வெளியேறிவிட்டோம். ஆனால் பிள்ளை, கடைக்குள் தான் இருந்துள்ளார். அவரைக்கண்ட இராணுவத்தினர், அருகிலிருந்த  பாழடைந்த பால்சேகரிப்பு நிலையக் கட்டடத்துக்;குள் கொண்டு சென்று, வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அது எமக்கு உடன் தெரியாது, மறுநாள் காலை வந்து பார்த்தபோது குறித்த இளம்பிள்ளையின் உடல், பனையோலையால் மூடப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களும் பலரால், வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன' எனத்; தெரிவித்தார்.
நேற்றைய விசாரணைகளின் போது அன்றைய சூழலில் கிராமத்தில் பணியாற்றிய கிராம சேவகர் சுப்பிரமணியம் இராசலிங்கமும், சாட்சியமளித்தார். 'குறித்த கிராமத்தில் 74 குடும்பங்கள் இருந்ததனர். அவர்கள் பெரும்பாலும், தற்காலிகக் கொட்டில்களிலே வசித்து வந்தனர். கிராமம், முகாமில் இருந்து 600  மீற்றர் தூரத்திலேயே  அமைந்துள்ளது' என அவர் விவரித்தார்.

மாரிமுத்து துரைராஜா (வயது 63) என்பவர் சாட்சிமளிக்கையில், 'நான், கிளிவெட்டியில் தேநீர்க்கடை வைத்திருந்தேன். அன்றைய தினம், கிளிவெட்டி முகாமிலிருந்த இராணுவத்தினர், சுட்ட வண்ணம் குமாரபுரத்தை நோக்கிச் சென்றனர்.

அதன்போது, இம்மன்றிலுள்ள குமார மற்றும் கபிலவும் சென்றதனை நான் கண்டேன்' எனவும் குறிப்பிட்டார்.

இவ்வழக்கு விசாரணை தொடர்பில் சாட்சியமளித்தல்,  இன்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .