-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம், 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இன்று வியாழக்கிழமை மாலை 6.20 மணிக்கு, வரவு - செலவு திட்டம் இறுதி வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐ.தே.கட்சியினரும் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது.
கடந்த 2ஆம் திகதி இந்த விவாதம் ஆரம்பமாகி நேற்று வரை 4ஆவது நாளாக ஐந்து அமைச்சுகளுக்கும் கீழுள்ள துறைகளுக்கும் இவ்விவாதங்கள் நடைபெற்றன. ஆயினும் கல்வி அமைச்சரின் கீழ்வரும் ஐந்து துறைகளுக்கான விவாதங்களில் எதிர்த்தரப்பில் இருந்த தமிழ் கூட்டமைபினர் பங்குபற்றவில்லை. காணி மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகள் இதில் உள்ளடக்கப்பட்டன. நேரம் மற்றும் ஒழுங்கப் பிரச்சினை காரணமாக இவர்கள் நேற்று முன்தினம் மாலை வெளிநடப்புச் செய்திருந்தனர். ஏனைய துறைகளுக்கான விவாதங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களினால் சமர்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றன.
நேற்றயதினம் சுகாதார, சுதேச வைத்தியத்துறை, விளையாட்டு, தகவல் தொழில்நுட்ப கல்வி அமைச்சுக்கான விவாதங்களும் நாளாந்த வாக்கெடுப்பும் இடம்பெற்றன. இதன்பின்னர் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது