2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் எதிர்காலம் இல்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளதெனவும் எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்ததுடன், அவர்கள் அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம் என்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி, அது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது டினவும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் மக்கள் கடந் தகால தேர்தல்களில் ஒருமித்த பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவுக்குள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு தமது அங்கிகாரத்தை வழங்கியுள்ளமையையும் மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தம், இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளதாகவும் ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் இலங்கையை பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவினை எட்டவேண்டுமென வலியுறுத்திய அவர், அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டிற்கு எதிர்காலம் இல்லையெனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  தொடர்பில் கருத்து  தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது. ஆகவே இந்த பிரேரணையை முழுமையாக நிறைவேற்றவேண்டிய கட்டாய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதெனத் தெரிவித்தார்.

மேலும் பிரேரணையில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களிடையையே அதிகாரப்பகிர்வின் நன்மைகளை எடுத்து சொல்லவேண்டியதன் அவசியம் உள்ளதையும்  எடுத்துக் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட பிரதிநிதி, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X