2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேசிய நத்தார் விழா....

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட்.சாஜஹான்

'இலங்கை ஏழ்மையிலிருந்து விடுதலைபெறும் வருடமாக, 2017ஆம் ஆண்டை, பிரகடனப்படுத்தியுள்ளோம். அடுத்துவரும் சில மாதங்களுக்கு, நாட்டில் மழைபெய்யாது வரட்சி நிலவும் என தெரியவருகிறது. வரட்சியானது, நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமாக அமையலாம். இது தொடர்பாக, நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, எமது வேலைத்திட்டங்கள் நிறைவேற, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வமதத் தலைவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

'சர்வ மதத் தலைவர்கள், தமது சமய  அனுஷ்டானங்கள் மற்றம் பிரார்த்தனைகளின் போது, நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூஜைகளை நடத்த வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

'தேசிய நத்தார் தின நிகழ்வு, நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சாந்த மரியாள் தேவாலயத்தில் நேற்று (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

'நத்தார் என்பது,  அன்பு, சமாதானம், கருணை, ஐக்கியம் என்பவற்றை எப்போதும் கூறி நிற்கிறது. எமது நாட்டைப் போன்று உலகுக்கும் அதுவே அவசியமானதாகும். நான் ஜனாதிபதியான ஒருவார காலத்தில், பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.  நான் ரோமுக்குச் சென்று, அவரின் ஆசியை பெற்றேன். உலகில் நிலவும் பயங்கரவாதத்தை ஒழிக்க, என்ன செய்யவேண்டும் என பாப்பரசர் என்னிடம் கேட்டார். இதற்கான பதில் நீண்டது என்பதால் நான் அமைதியாக இருந்தேன்.

யுத்தம் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது அவர்களை தோற்கடித்தோ பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. மாறாக யுத்த ஆயதங்களை தயாரிப்போரிடம் அதனை நிறுத்துமாறு கூறுவதன் மூலமாகவே, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என பாபபரசர் என்னிடம் தெரிவித்தார்' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .