2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சாதனையைத் தவறவிட்டார் சங்கக்கார

Editorial   / 2017 மே 31 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தோன்றிய மாபெரும் துடுப்பாட்ட வீரர் எனப் பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் டொன் பிரட்மனின் சாதனையொன்றைச் சமப்படுத்தும் வாய்ப்பை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, 16 ஓட்டங்களால் தவறவிட்டார்.

இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார, இதற்கு முன்னர் தான் துடுப்பெடுத்தாடிய 5 இனிங்ஸ்களிலும் சதம் பெற்றிருந்தார். இதன் மூலம், இலங்கை சார்பாக, முதற்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக சதங்கள் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்த சங்கக்கார, சரே சார்பாகவும் அதே சாதனையைப் படைத்திருந்தார்.

ஆனால், முதற்தரப் போட்டிகளில் அதிக சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றோர் என்ற சாதனை, அவுஸ்திரேலியாவின் டொன் பிரட்மன், இங்கிலாந்தின் சி.பி. ப்ரை, தென்னாபிரிக்காவின் மைக் புரொக்டர் ஆகியோரிடம் காணப்பட்டது. அவர்கள், தொடர்ச்சியாக 6 சதங்களைப் பெற்றிருந்தனர்.

தனது 6ஆவது சதத்தை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார, கடுமையான இருள் காரணமாக, போட்டி இடைநிறுத்தப்பட்டு, பின்னர் தொடங்கிய போது, அச்சாதனையை அடைந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 84 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, சுழற்பந்து வீச்சாளரான டொம் வெஸ்ட்லியின் பந்துவீச்சில், அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலமாக, பிரட்மனின் சாதனையைச் சமப்படுத்தும் வாய்ப்பை இழந்தார்.

எனினும், இங்கிலாந்து பிராந்தியப் போட்டிகளின் பிரிவு 1 இல், இதுவரை 5 போட்டிகளில் 8 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள குமார் சங்கக்கார, 5 சதங்கள், 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 876 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இது, 2ஆவது இடத்திலுள்ள வீரரை விட 294 ஓட்டங்கள் அதிகமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .