2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிரேஷ்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 02 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணப் போட்டிகளில், இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை இருபதுக்கு-20 அணியின் தற்காலிகத் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லையெனில், இலங்கை அணி தடுமாறுமெனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இப்போட்டியில், ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இலங்கை, இறுதி நேரத்தில் பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி, 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், 'ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இங்கேயிருப்பது தான் எங்களது அணி. அனேகமான நேரங்களில், சில சிரேஷ்ட வீரர்களிலேயே தங்கியிருக்கிறோம். சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்படவில்லையெனில், அனேகமான நேரங்களில் நாங்கள் தடுமாறுவோம். ஆசியக் கிண்ணம், உலகக் கிண்ணம் போன்ற தொடர்களில், உங்களது அணியில் அதிக சிரேஷ்ட வீரர்கள் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை. அணியிலுள்ள இளைய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்க, சிறிது காமெடுக்கும். நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஆனால் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இதுவல்ல" எனத் தெரிவித்தார்.

திலகரட்ண டில்ஷான், அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் இத்தொடரில் பிரகாசிக்கத் தவறியதோடு, முதலிரு போட்டிகளிலும் ஓரளவு ஓட்டங்களைப் பெற்றால், டினேஷ் சந்திமால் தடுமாறி வருகிறார். நேற்று இடம்பெற்ற போட்டியில் சாமர கப்புகெதர, ஓட்டங்களைப் பெற்றாலும், முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்திருந்தார். திஸ்ஸர பெரேரா, இன்னமும் சிறப்பாகப் பிரகாசித்திருக்கவில்லை. இந்தியாவுடனான போட்டியில் அதிரடியாக ஆடியிருந்தாலும், நடுவரின் மோசமான தீர்ப்பொன்றினால் அவர் ஆட்டமிழந்திருந்தார். குறிப்பாக டில்ஷான், அதிகமாகத் தடுமாறி வருகிறார். எனினும், டில்ஷானுக்கான ஆதரவை, மத்தியூஸ் வழங்கினார்.

'இலங்கை கிரிக்கெட்டுக்கு, மிகச்சிறந்த சேவகனாக டில்ஷான் இருந்துள்ளார். அனைவருமே, இவ்வாறான நாட்களில் சிக்குவதுண்டு. சிரேஷ்ட வீரர்கள் மாத்திரமன்றி, நாமனைவரும் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .