2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீர்ப்பு மீளாய்வு முறையை அமுல்படுத்தாமை குறித்து சங்கக்கார கவலை

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான   டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடுவர்களின் தீர்ப்புகளை மீளாய்வு செய்யும் முறை அமுல்படுத்தப்பட மாட்டாது  என்ற தீர்மானம் குறித்து தான் கவலையடைவதாக இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

இத்தொடர் எதிர்வரும் ஞாயிறன்று காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொருக்கான மைக்ரோமெக்ஸ் வெற்றி கிண்ணத்தை அறிமுகம் செய்யும் வைபவம் கொழும்பில் இன்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே சங்கக்கார மேற்கண்டவாறு கூறினார்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி மற்றும் கிரிக்கெட் சபை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

சங்கக்கார மேலும் கூறுகையில், போட்டிகளின்போது மனிதத் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக தீர்ப்பு மீளாய்வு முறையை நிரந்தரமாக அமுல்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய வேண்டும் என்றார்.

"ஐ.சி.சியின் தற்போதைய விதிகளின் படி, இந்த தீர்ப்பு மீளாய்வு முறையை அமுல்படுத்துவதானால்  சுற்றுலா மேற்கொள்ளும் அணியின் சம்மதத்தை போட்டிகளை நடத்தும் நாடு பெற்றுக்கொள்ளவேண்டும். இந்திய அணித் தரப்பில் இந்த மீளாய்வு முறையை அமுல்படுத்துவதற்கு ஆர்வமில்லை" என இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கூறினார்.

இதேவேளை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி கருத்துத் தெரிவிக்கையில் "தீர்ப்பு மீளாய்வு முறையில் சாத்தியமான சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப்படவில்லை எனில் எதற்காக அந்த முறையை அமுல்படுத்த வேண்டும்.? இந்த தீர்ப்பு மீளாய்வு முறை 100 சதவீதம் சரியான ஒன்றாக இல்லை. இதைவிட சிறந்த முறையொன்றே இப்போது அவசியமாகவுள்ளது" என்றார்.

(படப்பிடிப்பு: இந்திரரட்ண பாலசூரிய)






 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .