பாகிஸ்தான் அணியில் தான் இடம்பெறாமைக்கு பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், அவ்வணியின் உப தலைவர் மொஹமட் ஹபீஸ் ஆகியோரே காரணம் என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருக்காத அப்துல் ரஸாக், இறுதியாக 2011ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும், 2012ஆம் ஆண்டு டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், மிஸ்பா உல் ஹக், மொஹமட் ஹபீஸ் ஆகியோரே தன்னை அணியிலிருந்து நீக்கியதாகத் தெரிவித்ததோடு, பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்பார்ப்பு இன்னமும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வேறு சிலரின் அறிவுரையின் படி, முன்னர் காணப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஸாகா அஷ்ரப் சிரேஷ்ட வீரர்கள் அனைவரையும் அணியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார் எனக் குறிப்பிட்ட அப்துல் ரஸாக், தற்போது புதிய கிரிக்கெட் சபைத் தலைவர் காணப்படுவதன் காரணமாக என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலத் தோல்விகளுக்கு பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக்கே காரணம் எனக் குறிப்பிட்ட அப்துல் ரஸாக், அவர் மிக மெதுவாகத் துடுப்பெடுத்தாடுவதன் காரணமாக அணியிலுள்ள ஏனைய வீரர்களின் மீது அழுத்தம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு வைத்து ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டதுடன், அத்தொடரின் நாயகனாக மிஸ்பா உல் ஹக் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.