டென்னிஸ் அரங்கில் தனது காலம் முடிந்து விடவில்லை என நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். அவரது காலம் முடிந்துவிட்டதாக வெளியாகும் விமர்சனங்களையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னாள் முதற்தர வீரரான ரொஜர் பெடரர், உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். எனினும் அண்மைக்காலத்தில் தனது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தத் தவறிவரும் அவர், தற்போது தரப்படுத்தலில் 5ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ரொஜர் பெடரர், விமர்சனங்கள் மீது தனக்கு எந்த விதப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்தார். எனினும் தன் மீதான விமர்சனங்கள் நேர்மையுடன் காணப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
31 வயதான ரொஜர் பெடரர் தற்போது 5ஆவது இடத்தில் காணப்படுவது கடந்த 10 வருடங்களில் அவர் பெற்ற மோசமான தரப்படுத்தல் என்ற போதிலும், தரப்படுத்தல்கள் குறித்துத் தனக்கு அதிக கவனம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தரப்படுத்தல் முக்கியமான விடயமாக இல்லாது போகும் எனக் குறிப்பிட்ட ரொஜர் பெடரர், தற்போது என்ன இடத்தில் தான் தரப்படுத்தப்பட்டுள்ளேன் எனத் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.