இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டினேஷ் சந்திமால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமில் சிரேஷ்ட வீரர்கள் அனைவரும் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த மஹேல ஜெயவர்தன, லசித் மலிங்க இருவரும் இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, லசித் மலிங்க தொடர்ந்தும் உப தலைவராகச் செயற்படவுள்ளார். எனினும் ரங்கன ஹேரத்திற்கு இக்குழாமில் இடம் கிடைக்கவில்லை.
நேற்று முடிவடைந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றிருக்காத நுவான் குலசேகர, ஜீவன் மென்டிஸ் இருவரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர். இதில் நுவான் குலசேகர தனது உடற்தகுதியை நிரூபித்ததன் காரணமாகவே இக்குழாமில் இடம்பெற்றுள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தலா ஓர் இனிங்ஸில் மாத்திரம் துடுப்பெடுத்தாடி, அதில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தாத அஞ்சலோ பெரேரா, குஷால் ஜனித் பெரேரா இருவருக்கும் இக்குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 2ஆம் திகதி, 4ஆம் திகதி, 6ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள டுவென்டி டுவென்டி போட்டிகளில் முதற்போட்டி கொழும்பிலும், ஏனைய இரண்டு போட்டிகளும் ஹம்பாந்தோட்டையிலும் இடம்பெறவுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
டினேஷ் சந்திமால், லசித் மலிங்க, குஷால் ஜனித் பெரேரா, திலகரட்ண டில்ஷான், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமன்ன, அஞ்சலோ பெரேரா, ஜீவன் மென்டிஸ், திஸர பெரேரா, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், சச்சித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ்