அயர்லாந்தில் இடம்பெற்றுவந்த மகளிர் உலக டுவென்டி டுவென்டி தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டி முடிவற்ற போட்டியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகள் கிண்ணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
டப்ளினில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.
இணைப்பாட்டங்களைத் தொடர்ச்சியாக வழங்கிய போதிலும், அவ்வணி மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவ்வணியால் 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடியதாகக் காணப்பட்டது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக நயன் அபிரி 50 பந்துகளில் 45 ஓட்டங்களையும், பிஸ்பா மரூப் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சண்டிமா குணரத்ன 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சாமனி செனவிரத்ன 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணியின் இனிங்ஸின் பின்னர் மழை பெய்ததன் காரணமாக போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் இன்றைய தினத்திலும் போட்டி ஆரம்பிக்க முடியாது போனதால் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் கிண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.