இந்திய அணி தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளும் இன்று இணைந்து விடுத்த ஊடக அறிக்கையின் மூலமே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தென்னாபிரிக்காவில் பங்குபற்றவுள்ளது. இப்போட்டிகளுக்கான திகதிகளும், மைதானங்களும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
இந்திய அணி தென்னாபிரிக்காவில் 3 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றவிருந்த போதிலும், அத்தொடருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஹரூன் லோகார்ட் நியமிக்கப்பட்டதையடுத்தே இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளும் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தியிருந்ததோடு, இப்பேச்சுவார்த்தைகளின் இறுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் சட்ட ஆலோசகர் டேவிட் பெக்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கெதிராகத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக டேவிட் பெக்கருக்கும், ஹரூன் லோகார்ட்டிற்குமெதிராக சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணை மேற்கொள்ளவுள்ளது. இவ்விசாரணைகள் முடியும் வரை ஹரூன் லோகார்ட் சர்வதேச கிரிக்கெட் சபை சார்ந்த விவகாரங்களிலோ அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சார்ந்த விவகாரங்களிலோ பங்கேற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.