இந்திய டெஸ்ட் அணியில் விரேந்தர் செவாக், சகீர் கான் இருவரும் உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நேர்முக வர்ணனையாளருமான சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் போட்டிகள் வெளிநாடுகளில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களாக விரேந்தர் செவாக், சகீர் கான் இருவரும் அண்மைக்காலத்தில் பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையில், அண்மைக்கால டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
எனினும், இந்திய அணி தொடர்ந்து 13 டெஸ்ட் போட்டிகளை வெளிநாடுகளில் விளையாடவுள்ள நிலையில், அனுபவமும், வெளிநாட்டு ஆடுகளங்கள் குறித்த அறிவும் கொண்ட வீரர்கள் இந்திய அணியில் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட சௌரவ் கங்குலி, அதன் காரணமாக சகீர் கானும், விரேந்தர் செவாக்கும் உடனடியாக இந்திய டெஸ்ட் அணிக்குச் சேர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் காணப்படுகின்ற மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக சகீர் கானே தற்போதும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட சௌரவ் கங்குலி, அவரால் பந்துவீச்சில் ஏராளமான விடயங்களைச் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.
சகீர் கான், விரேந்தர் செவாக் தவிர, றோகித் சர்மாவிற்கும், சுரேஷ் ரெய்னாவிற்கும், மொஹமட் ஷமிக்கும் டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கங்குலி இங்கு குறிப்பிட்டார். 4ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக றோகித் சர்மாவும், 6ஆம் இலக்கத்தில் சுரேஷ் ரெய்னாவும், வேகப்பந்து வீச்சாளராக மொஹமட் ஷமியும் சேர்க்கப்பட வேண்டும் என கங்குலி இங்கு தெரிவித்தார்.
இந்தியாவில் இடம்பெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.