போதுமான பயிற்சிகளின்றி போட்டிகளில் பங்குபற்றுவது கடினமானது என இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார். ஆனால் அதனையே காரணமாகக் குறிப்பிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி 141 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இதில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததோடு, துடுப்பாட்ட வீரர்களில் அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி தவிர ஏனையோர் ஓட்டங்களைப் பெறத் தவறியிருந்தனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மகேந்திரசிங் டோணி, இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி தென்னாபிரிக்காவில் பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றாதது இந்திய அணிக்கு பிரதிகூலமாக அமைந்தது என்ற போதிலும், போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே காணப்பட்ட நிலையில், மன ரீதியாக இத்தொடருக்காகத் தயாராகி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தற்போதைய காலங்களில் சர்வதேசப் போட்டிகள் வருடம் முழுவதும் விளையாடப்படுகின்றன எனக் குறிப்பிட்ட மகேந்திரசிங் டோணி, இதன் காரணமாக போதுமான பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றி, ஒரு தொடருக்காக முழுமையாகத் தயாராகுவதற்கு முடிவதில்லை எனக் குறிப்பிட்டார்.