தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தனது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் படுதோல்வியடைந்துள்ள போதிலும், அடுத்த போட்டியில் வெற்றிபெற்றுக் கொள்ள முயற்சிக்கும் என தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி.டி.வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி நேற்றைய தினம் 50 ஓவர்களில் 358 ஓட்டங்களைக் குவித்ததோடு, இந்திய அணி 41 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
எனினும் முதலாவது போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட தொடரை வெற்றி கொள்வது நிச்சயம் என்றாகிவிடாது எனக் குறிப்பிட்ட ஏபி.டி.வில்லியர்ஸ், ஏராளமான கடின உழைப்புத் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த போட்டி இடம்பெறவுள்ள டேர்பன் மைதானம் இந்திய அணிக்குச் சாதகமானதாக அமையும் எனக் குறிப்பிட்ட ஏபி.டி.வில்லியர்ஸ், அதன் காரணமாக அந்தப் போட்டியில் வென்று தொடர் நிலையைச் சமப்படுத்திக் கொள்ள இந்திய வீரர்கள் நிச்சயமாக முயற்சிப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.
இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை மோசமானது அல்ல எனக் குறிப்பிட்ட ஏபி.டி.வில்லியர்ஸ், ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசியிருக்கவில்லை எனவும், அது தங்கள் அணிக்கு தன்னம்பிக்கையை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.