பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சகிப் அல் ஹசனை உடனடியாக அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சகிப் அல் ஹசன் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றுவதற்காக சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுளளது.
இங்கிலாந்தினூடாக பயணிக்கும் அவர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சகிப் அல் ஹசன், கரிபியன் லீக் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதியை பெறவில்லை எனவும், இது தொடர்பாக ஏழாம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அறிந்துள்ளதாக கிரிக்இன்போ இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சகிப் அல் ஹசனின் மனைவியுடன் தகாத சேட்டைகளில் ஈடுபட முயன்ற ஒருவரை சகிப் அல் ஹசன் தாக்கினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவும் அதே கூட்டத்தில் முடிவு எடுக்ககப்டும் எனவும், வீரர்களின் ஓய்வு அறையை விட்டு வேறு இடத்திற்கு சென்ற குற்றத்திற்கு தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சகிப் அல் ஹசன் உடனடியாக அணியுடன் இணையுமாறு கோரப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி காரணம் என்ன என்பதை கூறவில்லை.
கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இம்மாதம் ஏழாம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. ஆனாலும் மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகள் பங்குபற்றும் கிரிக்கெட் தொடருக்காக ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி பங்களாதேஷ் செல்லவுள்ளது. முதற்ப் போட்டி 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. சகிப் அல் ஹசன் பாபடோஸ் ட்ரைரேன்ட்ஸ் அணிக்காக முழுமையாக விளையாடுவார் என நம்பப்பட்டது. கடந்த வருட தொடரில் இந்த அணிக்காக விளையாடி தொடரின் இரண்டாவது கூடுதலான விக்கெட்களைக் சகிப் அல் ஹசன் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.