இந்திய அணியுடன் விளையாடவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடருக்கு சரியான தயார்படுத்தல்களை செய்யவில்லை என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தங்களால் இயன்றளவு பங்களிப்பை வழங்கி சிறப்பாக விளையாடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடைவெளியின் பின் பயிற்சிகளை ஆரம்பித்து ஆரம்ப கட்ட உடல் தகுதி பயிற்சிகளை மாத்திரமே மேற்கொண்டதாகவும், சீரற்ற காலநிலை பயிற்சிகளை சரியாக செய்ய முடியாமல் செய்ததது. இந்த நிலையில் இந்த தொடர் திடீர் என முடிவு செய்யப்பட்டது. எனவே முழுமையாக பயிற்சிகளை பெறாமலேயே இந்த தொடரில் பங்குபற்றுகின்றோம். இந்தியாவில் முழுமையான பயிற்சிகளை பெற முடியாது எனவும் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடர் மீதே முழுமையான கவனம் செலுத்தி வந்தோம். சிறப்பான உடற் தகுதியை பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டோம். 3 நாட்கள் மட்டுமே துடுப்பாட்ட பயிற்சிகளை செய்துள்ளோம். எனவே இந்த தொடர் மாத்திரம் அன்றி இங்கிலாந்து தொடருக்கான தயார்படுத்தல்களையும் செய்ய முடியாமல் போயுள்ளது எனவும் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய தொடர் அறிவிக்கப்பட்ட உடனேயே குமார் சங்ககார தங்கள் பயிற்சிகள் குழப்பப்பட்டுள்ளன என்ற கருத்துகளை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்காக இலங்கை அணி 28ஆம் திகதி இந்தியா பயணமாகவுள்ளது.