இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதி 4 போட்டிகளுக்குமான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிகளுக்குமாக அறிவிக்கப்பட்டிருந்த குழாமே இறுதி 4 போட்டிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதோடு, இரண்டாவது போட்டியில் அதிரடியான வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால் 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றிபெறும் நிலையிலிருந்து இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தது.
குறிப்பாக 48ஆவது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா 30 ஓட்டங்களை அந்த ஓவரில் விட்டுக் கொடுத்திருந்தமை இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக அடுத்த 4 போட்டிகளுக்குமான இந்தியக் குழாமில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்தன.
எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத 15 பேர் கொண்ட குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள முழுமையான குழாம்:
மகேந்திரசிங் டோணி, ஷீகர் தவான், றோகித் சர்மா, விராத் கோலி, யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஷ்ரா, அம்பத்தி ராயுடு, மொஹமட் ஷமி, ஜெய்தேவ் உனத்கட்