சிம்பாப்வேயிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
ஹராரே விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது விக்கெட்டுக்காக 72 ஓட்டங்கள் பகிரப்பட்ட பாதிலும், அதற்கு 21.5 ஓவர்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், அவ்வணி நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இறுதி நேரத்தில் எல்ற்றன் சிக்கும்புரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக ஷீகன்டர் ராஸா 112 பந்துகளில் 82 ஓட்டங்களையும், எல்ற்றன் சிக்கும்புரா 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும், வியூசி சிபன்டா 72 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஷ்ரா 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வினய் குமார், மொஹமட் ஷமி, ஜெய்தேவ் உனத்கட், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 44.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.
2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களுடன் காணப்பட்ட இந்திய அணி சார்பாக 3வது விக்கெட்டுக்காக விராத் கோலி, அம்பத்தி ராயுடு இருவரும் 159 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமூட்டினர்.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித்தலைவர் விராத் கோலி 108 பந்துகளில் 115 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு 84 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக புரொஸ்பர் உற்செயா 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கைல் ஜார்விஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவானார்.