2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமைச்சரவையில் வாக்குவாதம்

Editorial   / 2018 ஜனவரி 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பிணைமுறி விவகாரம் தொடர்பிலான அறிக்கை மீது, நாடாளுமன்றத்தில் இன்று(10) விசேட விவாதம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பில் காரசாரமான கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ள​னவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய வாளுக்கு பலியாகபோவது யாரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டிசெம்பர் மாதம் கேட்டதன் பின்னர், பிணைமுறி விவகாரம் தொடர்பிலான விசேட அறிவிப்பொன்றை, கடந்த வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு விடுத்தார்.   

அதன் பின்னர், நேற்றைய தினமே முதன்முறையாக அமைச்சரவை கூடியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை கூடியது.   

இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பிலான, அறிக்கை தொடர்பில், அமைச்சர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் இடையிலேயே இந்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.   

மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான அறிக்கைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் கோரப்பட்டுள்ளது. எனினும், அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. அறிக்கையின்றி விவாதம் நடத்துவதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

அமைச்சர்களான, சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய மூவரே, மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.   

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிணைமுறி விவகாரம் தொடர்பிலான, விவாதத்தை ஒன்றிணைந்த எதிரணியினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினருமே கேட்டுள்ளனர்.   

அதனடிப்படையில், நாடாளுமன்றத்தை கூட்டுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவை பணித்துள்ளார். சபையும், நாளை (இன்று) காலை கூடவிருக்கின்றது. இவ்வாறான நிலையில், மேற்படி குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இதேவேளை, விவாதம் ஒன்றை கோருவதற்கு முன்னர், அந்த விடயதானத்துக்கு உரிய அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பார்த்து கேட்டுள்ளதாக ​அறியமுடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .