2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தில்ருக்ஷிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கு கோரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

சட்டமா அதிபரால் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை நாளை (23) முன்வைக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன கூறியுள்ளார்.

குறித்த ஒழுக்காற்று விசாரணையின் போது, குறித்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதை டில்ருக்‌ஷி டயஸ் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தமை மற்றும் அதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்க சட்டமாஅதிபர் திணைக்களம் தயாராகியுள்ளதாக சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிஷங்க சேனாதிபதியுடன் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் என, அவரினால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் வீடியோவில் உள்ள உரையாடல் தன்னால் மேற்கொள்ளப்பட்டதாக டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சந்தித்து ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சமூக வலைத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) வெளியிட்ட குரல் பதிவு வீடியோ தொடர்பில் அன்று பிற்பகல் சட்டமா அதிபரை சந்தித்து ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ், தனது கடமைகளுக்காக சமூகமளித்திருந்த நிலையில், அவரை அழைத்த சட்டமா அதிபர் இந்த குரல் பதிவு தொடர்பில் விசாரித்த நிலையில் அதனை டில்ருக்‌ஷி டயஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல் என தெரிவித்தே நிஷங்க சேனாதிபதி குரல்பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த தொலைபேசி உரையாடலை கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (20) பகிரங்கப்படுத்தினார்.

அந்த தொலைபேசி உரையாடலில் தில்ருக்ஷி டயஸ் இவ்வாறு பேசியிருந்தார், “உங்கள் வர்த்தகம் இல்லாமற்போகும் என நான் எண்ணியிருந்தால், எனது வாழ்க்கையில் நான் அந்த வழக்கை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த மோசமான அரசியலினால் உங்களின் அலுவலகத்திலுள்ள 7500க்கும் அதிகக் கடிதங்களை தனிப்பட்ட ரீதியில் நான் வாசித்துள்ளேன். அதிகாரிகளுடன் நீங்கள் எப்படி இருந்தீர்கள், குடும்பங்களை எவ்வாறு பார்த்தீர்கள் என நான் அறிந்துள்ளேன். நிஷங்க உண்மையில் நான் கவலையடைந்தேன். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்திருக்க மாட்டேன். அந்த முழு செயற்பாடு தொடர்பில் நான் வேதனையடைந்துள்ளேன். எனக்கு சட்டத்தை தயாரிக்கவும் தெரியும், சட்டத்தை மீறவும் தெரியும்” என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவால் பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த குரல் பதிவு தொடர்பில், பதிலளித்து தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

அதில், “நிஷங்க சேனாதிபதிக்கு, அரச ஊழியர் என்ற வகையில் நீங்கள் பதிவு செய்துள்ள இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொதுமக்களுக்கு என்னால் தெளிவூட்ட முடியாது. அதனால் கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.

உங்களுடனான இந்த கலந்துரையாடலை அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வழங்கியது மற்றும் எதற்காக என்பதை மக்களுக்கு கூறுங்கள். அந்த தொலைபேசி உரையாடலை நீங்கள் திரிவுபடுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக முழு உரையாடலையும் வெளியிடுங்கள்.” என  பதவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .