2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தோல்வியடைந்தால் பிரிவினை உருவாகும்’

Editorial   / 2018 ஜூன் 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில், அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்குமென, எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும், மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவிவுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்கால அரசியல் நிலை குறித்து செயலாளரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் விசேடமாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், மக்கள் பிரதிநிதிகளாக எம்முன்னே எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உதாசீனம்  முடியாது என தெரிவித்த அதேவேளை, இந்த முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் எனவும் வலியுறுத்தினார். 

மேலும் புதிய அரசியல் யாப்பு நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகளை இல்லை என்பதை ஏற்க முடியாது என தெரிவித்த இரா சம்பந்தன், கடந்த காலங்களில் இதனை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்ட தாமதங்கள்  தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும் வலியுறுத்தினார்.

உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றை இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியும் என தெரிவித்த இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் தமது விருப்பத்துக்கும் சம்மதத்துக்கும் எதிராக ஆளப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

 

1956ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டின் அரசாங்க  கட்டமைப்பில் மாற்றத்தை வேண்டி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வந்துள்ளமையை எடுத்துக்கூறிய இரா.சம்பந்தன், இந்த ஜனநாயக கோரிக்கையானது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதையும் தெளிவுபடுத்தினார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பிலான எமது கோரிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அமைவாகவே இருப்பதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன், புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருமங்கள் 1988ஆம் ஆண்டிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஒவ்வொரு அரசாங்கமும் இது தொடர்பில் கருமங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தேவையற்ற தாமதங்களை இனிமேலும் ஏற்க முடியாது என தெரிவித்த இரா. சம்பந்தன், வரைபு யாப்பு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெருன்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கிகாரத்தைப் பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், துவேஷ சிந்தையுடன் செயற்படுவோர் இந்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இல்லை என தெரிவித்த இரா. சம்பந்தன், துரதிஷ்டவசமாக மென்போக்காளர்களை விட அவர்களின் கருத்துக்கள் முதன்மை பெறுவதாகவும் கூறினார்.

அத்துடன், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சமஉரிமை வழங்கப்டுவதில்லை இதனால் எம்மக்கள் விரக்தியடைந்துள்ளனர், மாறாக அதிகாரம் சரியாக பகிரப்படுமிடத்து இந்த பொருளாதார சமூக பிரச்சினைகளை மிக பயனுள்ள, நேர்த்தியான  வகையில் நிவிர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கிலுள்ள காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்,

“இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும், யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ளமையை கருத்திற்கொள்ளுகின்றபோது, இந்த கருமங்கள் இன்னும் துரிதமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

“ஆயுத படையினர் இந்த நிலங்களில் பயிர்ச்செய்கை செய்து  விளைச்சலை இந்த காணியின் உரிமையாளர்களுக்கே விற்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையே உள்ளது.

இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் நிலையான  சமாதானத்தை நோக்கி செல்வதற்கு இப்படியான நடவடிக்கைகள் தடையாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .