2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அனுபவ அறிவை பகிர்வதன் மூலம் உலகம் உயிர் பெறும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 10 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏனையோருடன் அனுபவ அறிவைப்; பகிர்ந்துகொள்வதனூடாக இந்த உலகம் உயிர் பெறுமென கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

 'ஒருங்கிணைவு ஊடாக அறிவை விருத்தி செய்தல்' எனும் தொனிப்பொருளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது சர்வதேச மாநாடு, அப்பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இந்த மாநாட்டின்போது மனிதவளமும் சமூகவியல் விஞ்ஞானமும், விவசாயமும் உணவுப் போஷாக்கும், சௌக்கிய பராமரிப்பும் விஞ்ஞானமும், வர்த்தக தொழில் முயற்சியாண்மை, காலநிலை மாற்றம் உள்ளிட்;ட விடயதானங்களில் ஆய்வும் அறிவுப்பகிர்வும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'பாமரனாக இருந்தாலும் படிப்பறிவுள்ளவராக இருந்தாலும் ஒருவரின் பட்டறிவு அனுபவம் என்பது விஞ்ஞானபூர்வமானதாகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது. ஆனாலும், இத்தகைய அனுபவ அறிவைப் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும், நிறுவன ரீதியாகவும் பரஸ்பரமாக பகிர்ந்துகொள்வதற்கான தளம் என்பதும் அத்தகைய ஒரு திறந்த கலாசாரம் இல்லாதிருப்பதும் பெருங்குறையாக இருந்து வருகின்றது. இந்தக் குறையைப் போக்குவதற்காக சமகாலத்தில் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.

'மேலும், அனுபவப்பகிர்வுப் பயணத்தில் கிழக்குப் பல்கலைக்கழகமும் பங்கெடுத்துள்ளது. இது ஒரு வரலாற்று முயற்சியாகும். இந்த அனுபவ அறிவானது இன, மத, மொழி பேதங்களையும் நாடுகளையும் கடந்து பகிர்ந்துகொள்ளப்படுவது மிக முக்கியமானதாகும்.

மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் புரிதலுக்கும் பிரபஞ்சத்தைப் புதுப்பிப்பதற்கும் புத்தாக்கத்தைப் படைப்பதற்கும் எல்லைகளையும் வேறுபாடுகளையும் கடந்து அனுபவ அறிவை வியாபித்து பரப்புவது நன்மை பயக்கும்.

எமக்கு முன்னுள்ளவர்களின் அறிவை நாம் ஏடுகளிலும் ஏனைய ஆவணங்களிலும் வைத்துக்கொண்டு பயன்படுத்துவதைப் போன்று, சமகாலத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் பிரசன்னமாகியிருக்கும் எமது அறிவையும் எதிர்காலச் சந்ததியினர் பயன்படுத்துவற்கு ஏற்றமாதிரியான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .