2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'இந்த நாட்டின்; அரசியல் யாப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கைப் பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில், வீட்டுக்கு வீடு மரம் நடும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் திங்கட்கிழமை மரம் நடுகைத் திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், '1972ஆம் ஆண்டு தமிழர்களையும் முஸ்லிம்களையும் புறந்தள்ளி இந்த அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நாட்டில் காணப்படுகின்ற இனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டுமென்பதற்காக மக்கள் கருத்தறியும் குழு அமைக்கப்பட்டு, அரசியல் யாப்பு ஆலோசனைகளும்  முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் அரசியல் யாப்பை மாற்ற வேண்டுமென்றும் மக்கள் கூறுகின்றனர்' என்றார்.

'தற்போது இந்த நாட்டிலுள்ள அரசியல் சூழலென்பது இனத்துவ அரசியல் சூழலாகும். இந்த இனத்துவ அரசியல் சூழலில் பெரும்பான்மையினத்தவர் பெரும்பான்மையினத்தவரைப் பற்றிச் சிந்திப்பது போன்று, தமிழர்கள் தமிழர்களைப் பற்றியும் முஸ்லிம்கள் முஸ்லிம்களைப் பற்றியும் சிந்திக்கின்றனர்' என்றார்.

'ஜெனீவாக் கூட்டத்தொடரிலும் கூட, இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டுமென்ற அடிப்படையில் பொறுப்புக்கூறுகின்ற அம்சம் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நாட்டில் நிலவுகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்பதில் அக்கறையுடன் இருக்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .