2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கைத்தொழில்களை ஊக்குவிப்பது பொருளாதாரத்துக்கு நன்று’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 06 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெரிய வர்த்தக வலயங்கள் நிறுவுவதற்குச் சமாந்தரமாக குடிசைக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் பெருந்துணை புரியுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர், மிச் நகர் கிராமத்தில் குடிசைக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதி வழங்கும் வைபவம், இன்று (06) நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட, ஊக்கமுள்ள பயனாளிகளை இனங்கண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சரின் அறக்கொடை உதவு ஊக்கத் திட்டத்தின் கீழ், இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அந்த அறக்கொடை நிறுவனத் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதல்வர், பாரிய கைத்தொழில் பேட்டைகளுக்காக முதலீடு செய்து பல நூற்றுக் கணக்கானோருக்கு தொழில்வாய்ப்பை வழங்குகின்ற அதேவேளை, வறுமைக் கோட்டின் கீழ் உதவிகளின்றி வாழ்ந்து கொண்டிருப்போரில் ஊக்கமுள்ளோரை இனங்கண்டு அவர்களுக்கான சுய தொழில் திட்டங்களுக்கு உதவ வேண்டும் என்பதே தனது நீண்டகால அவா என்றார்.

அதன் மூலமாக, வீட்டினதும் நாட்டினதும் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனச் சுட்டிக்காட்டிய அவர், வளர்ச்சியடைந்த ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இத்தகைய சமாந்தரமான அபிவிருத்தித் திட்டங்களைக் காணலாம் என்றும் மேற்கோள் காட்டினார்.

 

அங்கெல்லாம், அரச தொழில்துறைகளில் நாட்டங் கொள்வோரை விட சுய தொழில்களில் ஆர்வம் காட்டுவோரே அதிகம். அதனாலேயே அந்த நாடுகள் அவற்றின் குடிமக்களும் அபிவிருத்தியை அடைந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

எமது நாட்டிலிருந்து அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குத் வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று தமது குடும்பத்தைப் பிரிந்து அனுபவிக்கும் கஷ்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டே தான் முதலமைச்சராக பதவி வகித்தபொழுது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை துவக்கி வைத்ததாகவும் அவர் நினைவுபடுத்தனார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .