2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'கிழக்கு முதல்வரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்': ஹிஸ்புல்லாஹ்

Administrator   / 2016 மே 27 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம் நூர்தீன், எம்.முபாரக், வா கிருஸ்ணா

கடந்த 10 வருடகாலமாக எனது முயற்சியினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, ஆரயம்பதி பாலமுனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களை, கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வழங்கியமை கண்டிக்கத்தக்க செயலாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இவ்விடையம் குறித்து அமைச்சர் வியாழக்கிழமை (26)  வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மட்டக்களப்பு, ஆரயம்பதி -  பாலமுனை கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நான் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்; தலைவராக இருந்தேன்.

பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை கடலோரப்பகுதியிருந்து வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதற்காக, அப்போதைய காணி அமைச்சர் தி.மு. ஜயரட்னவை நான் தனிப்பட்ட ரீதியில் தொடர்புக் கொண்டு பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தேன். அதன் பலனாக பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக அவரது அனுமதியுடன் தனியார் காணியொன்றைப் பெற்றுக் கொண்டோம்.

பின்னர், அரச சார்பற்ற 'போரூட்'  நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அக்காணியில் 71 வீடுகளைக் கட்டினோம். வீடுகளைக் கட்டுவதில் நாங்கள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டோம். எனினும், அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு வீதி, நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுத்து இன்று அப்பிரதேசத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், அப்பகுதி மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாது இருந்தது. இது தொடர்பில் கடந்த 10 வருட காலமாக நான் எடுத்த தொடர் முயற்சியின் பலனாக அண்மையில் அவர்களது காணி உறுதிப்பத்திரங்களுக்கான அங்கிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டு பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இக்காணி உறுதிப்பத்திரங்களை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வினை, மே மாதம் 26, 27 அல்லது  28ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யுமாறு மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு இம்மாத ஆரம்பத்திலேயே எழுத்து மூலம் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், இது தொடர்பில் எதுவுமே அறிந்திராத, எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாத முதலமைச்சர் நஸீர் அஹமட் , 'தான் வந்து இந்த உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்க வேண்டும். இந்த காணி உறுதிப்பத்திரங்கள் எனது மாகாண அமைச்சின் ஊடாகவே தங்களுக்கு வழங்கப்படகின்றது' என  கூறி பிரதேச செயலாளரை அலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் எனக்கு தெரிவித்தபோது, 'கிழக்கு முதலமைச்சர் இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை, அவரும் நானும் கலந்துகொள்வதற்கான திகதியொன்றைக் குறிக்குமாறும்' நான் கூறியிருந்தேன்.

இவ்வாறான நிலையில் நான் வெளிநாடு சென்றதை அறிந்த கிழக்கு முதல்வர் பலாத்காரமாகக் காணி உறுதிப்பத்திரங்களை புதன்கிழமை  (25) அவசர அவசரமாக வழங்கி வைத்துள்ளார். முதலமைச்சரின் இச்செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவரது சாதாரண அரச நிர்வாக அறிவு கூட இல்லாத நிலையை எடுத்துக்காட்டுகிறது.

எங்களுக்கிடையில் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் வேற்றுமையில்லாது ஒன்றாக பயணிக்கவே நாங்கள் விரும்புகிறோம். அலி ஸாஹிர் மௌலானா, அமீர் அலி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனும் நாங்கள் நல்ல முறையிலேயே நடந்து கொள்கின்றோம். இவ்வாறான நிலையில் முதலமைச்சர் நஸீரின் அண்மைக்கால போக்குகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகவுள்ளன. பிற்போக்கான அரசியல் கலாசாரத்தை கைவிட்டு அனைவருடனும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அவருக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன் என அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X