2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுமிக்கு சூடு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு நெருப்பால் சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தந்தையையும் அவரது இரண்டாவது மனைவியையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அங்கு சட்ட வைத்திய நிபுணரின் ஆலோசனையின் பேரிலும்  அவரின் கண்காணிப்பிலும்  சிகிச்சை அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை (13) காலை பொலிஸார் கைதுசெய்தனர்.  
காத்தான்குடி ஆறாம் குறிச்சியில்; வசிக்கும் இந்தச்  சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் சூடு வைத்ததாகவும் அதனால் அவரது உடம்பில் எரிகாயம் இருப்பதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்துள்ளது.

 இதையடுத்து காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்குச் சென்று அங்கு சிறுமியை விசாரணை செய்ததுடன் சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தையையும் விசாரணை செய்துள்ளனர்.
குறித்த சிறுமியை காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்ற காத்தான்குடி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .