2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொழிலுக்காக இளம் சமூகத்தினர் போராடவேண்டிய நிலைமை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவந்த பல தொழிற்சாலைகள் கடந்த யுத்த சூழ்நிலையின்போது அழிக்கப்பட்டமை காரணமாக இளம் சமூகத்தினர் தொழிலுக்காக வீதியில் இறங்கிப் போராடவேண்டிய நிலைமை  ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை (02) மாலை அங்கு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தொழிற்சாலைகள் காணப்பட்டதால் சாதாரணமாகப் படித்திருந்தாலும், தொழில்களைப் பெறக்;கூடிய நிலைமை காணப்பட்டது. ஆனால், யுத்த சூழ்நிலையின்போது, பல தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. சில தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

எமது பிரதேசங்களில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் அதிகரித்ததன் காரணமாக வேலைக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகள் தொழிற்கல்வியைப் பயின்று சுயதொழில்களை மேற்கொள்வதன் மூலமே தமது வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டிய நிலைமை காணப்படுகின்றது' என்றார்.
 
'அரசியல் ரீதியாக இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வளர்ப்பதற்கு இளைஞர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
 
அரசியல் என்றால் பலர் சாக்கடையெனக்  கருதுகின்றனர். அரசியல்வாதிகள் செய்கின்ற பிழைகள் காரணமாக மக்கள் வித்தியாசமான முறையில் எண்ணுகின்றனர். இளைஞர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களாக அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.
 
எதிர்காலத்தில் எமது பிரதேசங்களில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்தும் வழங்கப்படும். இளைஞர்கள் இளைஞர் அணிகளில் இணைந்து தமது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்த வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .