2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக த.தே.கூ நடக்காது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
'அரசாங்கத்துக்கு நல்லிணக்க அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கினாலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக ஒருபோதும் நடந்துகொள்ளாது என்பதுடன், இந்த விடயத்தில் எமது தலைமை உறுதியாக உள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் அடையத் தேவையில்லை எனக்  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
த.தே.கூ., வரவு -செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பாக ஆதரவாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம், மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, அரசாங்கம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையை இழந்துவிடாமல் எமது தலைமை பாதுகாத்து வருகின்றது. இதன் காரணமாக எமது கட்சித் தலைமை பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாக எமது தலைமை ஒருபோதும் செயற்படாது' என்றார்.

'தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வை த.தே.கூ. முன்வைத்து கடந்த தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்றது.
 
தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தில் எமது தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாக இருக்கிறார். அத்துடன், அதில் நானும் உறுதியாக உள்ளேன். அதை மீறிச் செயற்பட்டால் மக்கள் ஆணைக்கு முரணானது.
 
மேலும், யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணையில் உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசாங்கம் இதிலிருந்து தப்ப முடியாது. இது தொடர்பில் த.தே.கூ. உறுதியாக உள்ளது. அதற்காக இராஜதந்திர ரீதியில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது' எனவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .