2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'மாணவர்கள் எதிர்காலத்தில் உதவுபவர்களாக மாறவேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இப்பொழுது உதவி பெறும் வறிய மாணவர்கள் எதிர்காலத்தில் முன்னேறி மற்றவர்களுக்கு உதவுபவர்களாக மாறவேண்டும் என மட்டக்களப்பு புனித ஆன்ற் தேவாலய போதகர் அடிகளார். எக்ஸ்.ஐ.ரஜீவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை 'பெரெண்டினா' தன்னார்வ உதவு நிறுவனத்தினால் கல்வியில் திறமை காட்டும் உயர்தரத்தில் கற்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்கள் 127 பேருக்கு மாதாந்த உதவி தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

திறமையான அதேவேளை, பொருளாதார ரீதியில் நலிவடைந்த மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதை மற்றெல்லா உதவிகளையும் விட மேலானதாக நான் மதிக்கிறேன்.

காரணம், ஏதோ கிடைப்பதை யாருக்காவது உதவி செய்து விட்டுப் போவோம் என்று கொடுத்து விடுவதை விட இந்த பெரென்டினா நிறுவனம் திறமையான உயர்தரம் கற்கும் வறிய மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பல்கலைக்கழகப் படிப்பு வரை உதவிக் கரம் நீட்டுகின்றது.

அப்படிப்பட்ட மாணவர்கள் இன்றே தலைவர்களாக்கப்படுகின்றார்கள்.

அவர்கள் தமது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான திறமைசாலிகளை உருவாக்கா விட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் தம்மைப் போன்ற ஒருவரையாவது மருத்துவராக, பொறியியலாளராக, விஞ்ஞானியாக, நிருவாகியாக உருவாக்க வேண்டும்.

அதையும் ஓர் இலட்சியாகக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து நமக்கு கொடையளிப்போர் அங்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்வோரல்ல. அவர்களில் பலர் தினக் கூலிகளாகக் கஷ்டப்பட்டு நமக்குப் பணம் அனுப்புகின்றார்கள்.

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கையிலுள்ள வறிய மாணவர் ஒருவருக்கு உதவு தொகை அனுப்பிய ஒருவரை விசாரித்தறிந்தபோது அவர் ஒரு நகர சுத்திகரிப்பு தொழிலாளி பெண் என்பது தெரியவந்தது. இதைப்போல ஏராளமான சம்பவங்கள் உள்ளன.

எனவே, எமக்குக் கிடைக்கும் உதவிகளை துஷ்பிரயோகம் செய்யாது கண்ணியமாகப் பயன்படுத்துவதோடு கொடையாளி உள்ளங்களுக்காக பிரார்த்திக்கவும் வேண்டும்  என்றார்.

'பிரகாசிக்கும் மாணவர் கல்விக்கான புலமைப் பரிசில்' பெரெண்டினா தன்னார்வ உதவு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். தினேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு,பட்டிப்பளை, வாழைச்சேனை, மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள 127 மாணவர்கள் இந்த உதவு தொகைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .