2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

13ஆவதை பலவீனப்படுத்த இடமளியோம்: த.ம.வி.பு

Kanagaraj   / 2012 நவம்பர் 15 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ரி.லோஹித் )

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்றுக்கொள்ளாது.

அந்த முறைமையினை பலவீனப்படுத்த கட்சி இடமளிக்காது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான  பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபனின் (ரகு) நான்காம் ஆண்டு நினைவை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கட்சி தலைமையகத்;தில் கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற கட்சித் தொண்டர்களுடனான முக்கிய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


'எமது நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கலின் ஆரம்பப்படியாக இருக்கின்ற மாகாணசபை முறையும் அதற்கான 13ஆவது அரசியல் திருத்த அதிகாரங்களையும் பலவீனப்படுத்துகின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற சட்டரீதியான அல்லது வேறு வகையிலான முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்றுக்கொள்ளாது.

இலங்கையில் நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பப்படியாக மாகாணசபை முறையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

மாகாணங்களின் ஊடான அதிகாரப்பரவலாக்கல்  தேவையை உணர்ந்த அனைத்துத் தரப்பு மக்களினதும் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதனுடன் இதன் ஊடாக முழுமைப்படுத்தப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை எய்த முடியும் என்றும்; கட்சி உறுதியாக நம்புகின்றது.

சமகாலத்தில் 13ஆவது அரசியல் அதிகாரம் தேவையா? இல்லையா? என்கிற விவாதம் எழுந்துள்ளமை மிகவும் கவலைக்கு உரியதாகவும் துரதிஷ்டவசமானதுமாகும். எமது நாடு இனவாதங்களிலிருந்து மீண்டு சுபீட்சமான இயல்பு வாழ்க்கையை நோக்கி முன்னேறுகின்ற தருணத்தில் தமிழ் பேசும் மக்கள் அச்சப்படுகின்ற இவ்வாறான தோற்றப்பாடுகளை உருவாக்குவதை பொறுப்புமிக்க தலைவர்களும் அரசியல் கட்சிகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மாகாணசபை முறைமையோ அல்லது 13ஆவது அரசியல் அதிகாரங்களையோ பலவீனப்படுத்துகின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு எதிராக அதிகாரப்பகிர்வில் நம்பிக்கை கொண்ட தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஜனநாயக ரீதியலான வெகுஜன போராட்டங்களை நடத்தவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பின்நிற்கப்போவதில்லை.

கொடிய யுத்தம், இனரீதியான முரண்பாடுகள் போன்ற கரும் பக்கங்களிலிருந்து  நாடு மீண்டு வருகின்ற வேளைகளில் இனங்களுக்கிடையே நல்லுறவையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் ஒன்றுபடவேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுக்கின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .