2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு பல்கலை மாணவர்கள் 14 பேருக்கு ஒருவருட கற்கைத்தடை

A.P.Mathan   / 2010 நவம்பர் 18 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்களுக்கு ஒருவருட கற்கைத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். இத்தடை நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வர்த்தகபீட மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 5 மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் இருவருக்குமாக மொத்தம் 7 பெரும்பான்மை இன மாணவர்களுக்கு ஒரு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாந்த இசை, நடனக் கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்டு விசாரணைகளுக்கான காலத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்த 7 மாணவர்களுக்கும் இந்த ஒருவருட கற்கைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது:

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த பதுளையை சொந்த இடமாகக் கொண்ட ஒரு மாணவியை பகிடிவதைக்கு உட்படுத்திய ஒரு மாணவனும் 4 மாணவிகளுக்கும் விசாரணைகள் முடியும் வரை வகுப்புத் தடை விதிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடைய பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவர்கள் தாம் அனைவரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பகல் வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிமுதல் விசாரணைகள் நடைபெற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிறைவடைந்தன. பின்னர் நடைபெற்ற பிஆர்டி எனப்படுகிற பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கும் ஒழுக்கங்களுக்குமான அவை தீர்மானத்திற்கு அமைய இந் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .