2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதேச சபைக்குரிய காணி தலைவரின் உறவினர் பெயரில் இருப்பதாக குற்றச்சாட்டு

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(எம்.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச சபையின் பொதுச் சந்தை அமைந்துள்ள காணியை பிரதேச சபைத் தலைவரின் உறவினர் பெயரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதாக சபையின் எதிர்க்கட்சியினரும் அப்பகுதிப் பொது அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே வேளை, தலைவர் உடனடியாக பிரதேச சபைக்கு உரிய 120 பேர்ச் காணியினை எழுதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
 
இது குறித்து சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.விமலனாதன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கூறுகையில்,
 
"48 இலட்சம் ரூபா நிதி சந்தை கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிலம் இல்லாத நிலையில் சபையினால் குறிப்பிட்ட நிலத்தை வாங்க எண்ணிய போது தலைவர் என்னை அழைத்து, 'குறித்த காணி 120 பேர்ச்சையும் ஒப்பந்தகாரர் வாங்கித் தருவதாக உடன்பட்டுள்ளார். ஆதலால் அவருக்கு ஒப்பந்தத்தை வழங்குவோம். சபை நிதியை இதற்க்குப் பயன்படுத்தத் தேவையில்லை' என கேட்டதற்கு அமைய நானும் சம்மதத்தை தெரிவித்தேன். அதனடிப்படையில் காணி வாங்கப்பட்டது. ஆனால், அதனை தனது உறவினர் பெயரில் தலைவர் பதிவு செய்துள்ளார்.
 
இதுவரை சபைக்கு காணியை எழுதி வழங்குவதாக இல்லை.காணியினை விற்றவர்கள் பிரதேச சபைக்கு என்பதனால் தான் விற்றதாக தெரிவிக்கினறனர். காணியினை எழுதி வழங்கா விட்டால் பொது அமைப்புக்களை இணைத்து வீதியில் இறங்கிப் போராடவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
 
காணியினை சபையின் பெயருக்கு எழுதாமல் பொதுக் கட்டடத்தை கட்ட முடியாது. காணியினை சபைக்கு எழுதாது கட்டடம் கட்டியமைக்கான முழுப் பொறுப்பையும் பிரதேச சபை அதிகாரிகளே ஏற்க வேண்டும். ஆனால் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே கட்டட அனுமதி வழங்க அதிகாரிகளை பணித்துள்ளார் என்பது எதிர்கட்சியினரின் குற்றச் சாட்டாக உள்ளது.
 
இது குறித்து வவுணதீவுப் பிரதேச சபை தலைவர் கா.சுப்ரமணியத்திடம் கேட்டபோது, அக்காணி தனது மருமகனுடையது எனவும், இடமில்லாததினால் அதில் சந்தை நிர்மாணிக்க தான் பணித்ததாகவும், 120 பேர்ச்சையும் வழங்க முடியாது. ஆனால் கட்டடம் உள்ள 40 பேர்ச் காணியினை தனது மருமகன் ஊடாக ஒரு மாதத்துக்குள் எழுதி வழங்கவுள்ளதாககவும் தெரிவித்தார்.
 
இந்நிலையில் காணியை எழுதி சபைக்கு வழங்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழங்கா விட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என எதிர்க்கட்சியினரும் பொது அமைப்புக்களும்  தெரிவிக்கின்றனர்.

 

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .