2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழர் படுகொலைகளை நினைவு கூறுவது எந்த இனத்துக்கும் எதிரானதாக கருதக் கூடாது–அரியநேத்திரன் எம்.பி

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                             (கே.எஸ்.வதனகுமார்)

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தை நினைவு கூறும் நிகழ்வை எந்தவொரு இனமும் தங்களுக்கு எதிரான நிகழ்வாகவோ, செயலாகவோ கருதக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் ஆயுதக் குழுவொன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நினைவு தின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாரிய இனப்படுகொலைகள் இடம்பெற்றாலும், அக்காலப்பகுதி மட்டக்களப்பை பொறுத்த வரையில் தொடர்ச்சியாக வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை என தொடர்ச்சியாக சென்றது.

இத்தினங்களை ஏன் நாங்கள் நினைவு கூறுகின்றோம் என்றால் வரலாறுகள் எம்மிடம் இருந்து அழியக் கூடாது. அவை பாதுகாக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும் என்பதற்காகவே.

இந்த நிகழ்வுகளை எந்தவொரு இனமோ, நபரோ தங்களுக்கு எதிரானதாக கருதக்கூடாது.

காத்தான்குடியில் இடம்பெற்ற படுகொலையை அவர்கள் தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து வருகின்றார்கள். அது அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமை. அதனை நாம் மறுக்க முடியாது.

அதே போன்று தான் கடந்த 30 வருட போராட்ட காலத்தில் 90ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது தொடர்ந்துகொண்டே சென்றது.

அதிலொரு அங்கமே இந்த படுகொலையாகும். ஆனால் எமது மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையிலே தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற எமது மக்களின் நலனுக்காக பாடுபடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியான உரிமையினை பெறுவதற்கு பாடுபடும்.

எந்தவித போராட்ட முன்னெடுப்புகளிலும் ஈடுபடாத இந்த அப்பாவி தமிழ் மக்களின் படுகொலையானது காலம் காலமாக நினைவு கூரப்படவேண்டும். அதனை செய்யவேண்டியது எமது சமூகத்தின் தலையாய கடமையாகும் எனவும் அவர் கூறினார்.

alt

alt

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .