2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தமிழர்களாகிய நாம் முன்பு இருந்த காலத்தைவிட இப்போதுதான் விழிப்பாகஇருக்க வேண்டும்: பா.அரியநேந்திரன்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்,ஆர்.அனுருத்தன்,ஜிப்ரான்)

விழிப்பாக இருக்காவிட்டால் இருக்கும் இடமும் பறிபோகும் அபாயம் ஏற்படும். எனவே தமிழர்களாகிய நாம் முன்பு இருந்த காலத்தைவிடவும் இப்போதுதான் விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. ஏனென்றால் 2009 மே மாதத்துக்கு முன்னர் எம்முடைய பல பிரச்சினைகளைப் பார்த்துக்கொள்ள இன்னொரு தரப்பினர் இருந்தனர்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீசித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற 2008 - 2009ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர்,
வடக்கு கிழக்கில் 1970களுக்கு முன்னர் இருந்த கல்விச் சாதனையாளர்கள் கூட்டம் 70க்குப ;பின்னர் இல்லாது போனது. அன்று இருந்த கல்வி நிலை வீழ்ச்சியை நோக்கிச் சென்றது.


போர் முடிவடைந்துள்ளதாகவும் அபிவிருத்திகள் நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது. அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ நானோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் அடிப்படையான விடயங்களைச் சூறையாடுவதும், மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.


மக்கள் கல்வியில் அவதானம் செலுத்தும் அதேவேளை நாம் வாழும் சமூகத்திலும், அரசியலிலும்; பொது விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் எதிர்காலத்தைச் சரியாகக் கொண்டு செல்ல முடியாது. ஆகவே பெற்றோர்கள் மிகுந்த அவதானதத்துடன் இருந்து எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களை உருவாக்குங்கள்.
வடக்கு, கிழக்கில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு பாடசாலைகளில் கலாசார சீர்கேடு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. திட்டமிட்டு நுழைக்கப்படும் விடயங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ளது. இவ்வாறான பல பிரச்சினைகளை சீர்செய்யக்கூடிய கல்விதான் எதிர்காலத் தேவையாகும்.


வன்னியில் இருக்கும் மாணவர்களைப் பெற்றோரை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். அவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நமது பிரதேசத்து மக்கள கொடுப்பதில்லை.
என்னிடம் நிதியுதவி கேட்டு வருபவர்களில் அதிகமானவர்கள் ஆலயத்திற்காகவே பணம் கேட்கிறார்கள். ஆலயங்கள் ஒழுக்கங்களைக் கற்;பிப்பதற்காகவும் நல்ல மாணவர்களை உருவாக்குவதற்கும் பணம் செலவிடுவது மிகக் குறைவாகும். ஆனால் வன்னியில் மக்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாகவும், பாடசாலையை புனரமைப்பது ஆசிரியர்களுக்கு உதவுவது குறித்துதே நிதிகளைக் கேட்கிறார்கள். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.


நான் அபிவிருத்தி செய்வேன் என்றோ, வேலைவாய்ப்பு பெற்றுத்தருவேன் என்றோ, இடமாற்றம் பெற்றுத்தருவேன் என்றோ கூறி தேர்தலில் போட்டியிடவுமில்லை. வெற்றி பெறவுமில்லை. அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ, அதற்காகவே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். இதனை இப்போது ஒரு தேர்தலை நடத்தினாலும் நாங்கள் எங்களுடைய பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் என்றார்.


பாடசாலை அதிபர் சி.எம்.குமாரசாமியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பரிசளிப்பு விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் பாடசாலையிலும், சாதாரணதரப் பரீட்சைகளிலும் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் தமது திறமைகளைக் காண்பித்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .