2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சொத்துச் சோப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை: மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன்

Super User   / 2011 ஜனவரி 21 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

எனக்கு சொத்துச் சேர்ப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை மக்களின் விடிவே எமது முடிவு என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி பிரதேச செயலக சர்ச்சை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொடர்ந்தும் மக்களை மடையர்களாக கையேந்தும் சமூகமாக மாற்றி அரசியல் தலைமைகளின் எண்ணங்களுக்கு ஆடும் பொம்மைகளாக மாற்றுவதற்கோ தனிப்பட்ட ரீதியில் எமது வங்கி இருப்பையோ, சுகபோகங்களை அனுபவிக்கவோ அரசியல் பாதைக்கு வந்தவனல்ல.

நான் சார்ந்த எனது கட்சியும், அதன் தலைவர் சந்திரகாந்தனும் அவ் வழியே தன்னுயிரைத் தியாகம் செய்யத் துணிந்த நேர்மை மிக்க தலைவன். அவரின் பாசறையிலுள்ள நாம் அநியாயத்திற்கும், ஊழலுக்கும், அடாவடித்தனங்களுக்கும் ஒரு போதும் துணை நிற்கப் போவதில்லை என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை ஆரம்பத்தில் கசக்கும். ஆனால் அது தான் நிரந்தரம்.

ஒரு பொய்யை மறைத்து மக்களுக்கு துரோகம் செய்ய முற்பட்டதன் விளைவே மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மீதான மக்களின் கிளர்ச்சிக்குக் காரணம். இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை. இருக்கவும் தேவையில்லை. அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பில் பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் பெருந்தொகையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதும் அவை அப்பகுதி மக்களுக்கு சென்றடையமல் போவதும் மக்கள் அறிந்த உண்மை.

பசித்த வயிற்றுக்கு புசிப்பதற்கே அரச நிவாரணம். மாறாக ஒரு சில ஊழல் பேர்வழிகளின் வங்கிக் கணக்கையும், மாடிவீடுகளையும் அமைப்பதற்கல்ல. பல அரச அதிகாரிகள் வெள்ளம், புயல் என அனைத்து அனர்த்தத்திலும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

இவர்களுள் அரச அதிகாரி என்ற பெயரில் ஒரு சிலர் செய்யும் துரோகமே மக்களை அரசு மீது வெறுப்படையச் செய்கின்றது.

மண்முனைப்பற்று சம்பவமும் அவ்வாறே அவசரப் பொலிஸ் கையும் களவுமாகப் பிடித்த கிராம சேவையாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாமல் தேக்கிவைக்கப்பட்டுள்ளது என்றே மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் குறித்த மக்கள் கூக்குரலிட்டனர்.

எது எவ்வாறு இருப்பினும் முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதேச செயலாளர் அதனை மூடி மறைக்க முற்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டமை குறித்துமே மக்கள் புரட்சி கிளர்ந்தெழுந்தது.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று மக்கள் குறைதீர்க்க வேண்டியது எனது கடமை. அதே போல் ஆளும் கட்சி பிரதிநிதி என்ற ரீதியில் அரச நிருவாகத்தினை பாதுகாத்து நெறிப்படுத்த வேண்டியதும் எனது பொறுப்பு. அதற்கு மேலாக மண்முனைப்பற்று மக்கள் எனக்கும் எனது த.ம.வி.பு.கட்சிக்கும் 91மூ வாக்கு வழங்கி ஆட்சிபீடம் ஏற்றியவர்கள்.

அங்கு பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டால் அவ்விடம் செல்லவேண்டியது எனது தார்மீகப் பொறுப்பாகும். அதன்படியே நான் அங்கு சென்றேனே தவிர பிரதேச செயலாளருக்கோ எனக்கோ தனிப்பட்ட எந்த குரோதமும் கிடையாது. குறித்த பிரதேச செயலாளர் மண்முனைப்பற்றிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தவன் நான் என்பது வெளிப்படையான உண்மை.

குற்றம் எவர் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதற்கு மாறாக அதிகாரிகள் சிலர் குற்றத்தினை புரிந்த ஓர் அதிகாரிக்கு குற்றத்தினை மறைக்க எத்தனிப்பது நொந்துபோன எம் சமூகத்தின் எதிர்கால சுபீட்சத்திற்கு வழிசமைக்காது.

ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடந்த சுனாமி அனர்த்த நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு மக்களால் கிடைக்கப்பெற்றது. அதே போல் யுத்த கால நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு. வெள்ள நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு. எங்கு தவறு உள்ளது. அதனை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர மூடி மறைக்க யாரும் துணைபோகக் கூடாது என இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றேன்.

இறைவனால் கொடுக்கப்பட்ட அரசியல் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு மிக்க சுமையை மக்களுக்காக சுமக்க வேண்டுமே தவிர சுயநலத்திற்காக சுமக்கக் கூடாது. சுயநலம் மேலோங்கியதன் விளைவே 60 வருட மக்களின் துன்ப நிலைக்குக் காரணம் அரச சொத்துக்களை சேதம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்படியெனில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் குறித்த கிராம சேவையாளரே. குறித்த கிராம சேவையாளரே மக்களுக்காக வழங்கப்பட்ட அரச நிவாரணத்தினை பதுக்கி வைத்தவர் என மக்கள் கூறுகின்றனர்.

இதற்கான தீர்வு கிடைக்காதததன் விளைவே 16.01.2011ம் திகதி மக்கள் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது மக்களின் உள்ளங்கனி நெல்லிக்கனியான கருத்து.

குறித்த கிராம சேவையாளரையோ அல்லது அம் முகாம் நடாத்தியதாகக் குறிப்பிடப்படும் குறித்த குற்றச் செயலுடன் தொடர்புபட்ட அமைப்புக்களையோ மக்கள் மத்தியில் ஆராய்ந்து மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவேண்டியதும் அதிகாரிகளின் பொறுப்பு என்பதனை நான் உணர்கின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .