2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் இறால் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


யுத்தசூழல் மற்றும் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இறால் உற்பத்தியினை மீள கட்டியெழுப்பி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு மாவட்டத்தில் இறால் வளர்ப்பினை ஊக்குவிக்க கடற்றொழில் நீரியல்வள அமைச்சு உலக வங்கி நிதி உதவியில் விஷேட திட்டங்களை அமுல்படுதி வருகின்றது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முயற்சியில் உலக வங்கி நிதி ஒதுக்கீட்டில் சுமார் 7 கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட இறால் வளர்ப்பு உற்பத்தி திட்டத்தில் வாகரை வட்டவான் பகுதியில் மாதிரி இறால் பண்ணையொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நீரியல் உயிரியலாளர் எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.

இத்திட்டத்தை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை மட்டக்களப்பு இறால் வளர்ப்பு விரிவாக்கல் கண்காணிப்பு பிரிவு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தும் பொருட்டு சிறந்த இறால் பண்ணை முகாமைத்துவ நடைமுறைகளை வகுக்கும் பொருட்டும் விசேட பயிற்ச்சி பட்டறை ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட நீரியல் உயிரியலாளர் எஸ்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிட்சி பட்டறையில்  தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திர ரத்னா, உதவிப் பணிப்பாளர் கே.ஏ.அத்துல, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பல உயரதிகாரிகளால் சிறந்த முகாமைத்துவ திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மாவட்ட இறால் பண்ணையாளர்கள், நன்னீர் வளர்ப்பு திட்ட அதிகாரிகள், சுற்றாடல், வனவள, விவசாய, நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விசேட பயிற்சிப்பட்டறைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சூழலுக்கு பாதிப்பற்ற முறையிலும் சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்து நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி சிறந்த இறால் வளர்ப்பு முகாமைத்துவத்தை அமுல்படுத்துவதற்கான சிறந்த ஆவணம் தயாரிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .