2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் சில பாடசாலைகளை மூடுமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் முகமாக அங்குள்ள  சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள பாடசாலைகள், குர் ஆன் மதரசாக்கள், பிரத்தியேக கல்வி நிலையங்கள் ஆகியவற்றை  மறு அறிவித்தல்வரை மூடுமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனினால் கையொப்பமிட்டு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மைக்காலமாக காத்தான்குடி பிரசேத்தில் டெங்கு நோயால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டமை இனங்காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், பல மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் பெறுமதிவாய்ந்த மாணவர் சமூகத்தின் உயிர்களை காக்கும் நோக்கில் தீவிர தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இலக்கம் 165, 165பி, 166, 166ஏ, 167, 167ஏ, 167சி, 167இ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி மற்றும் புதிய காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் இயங்கிவரும் அரச தனியார் பாடசாலைகள் மற்றும் குர் ஆன் மதரசாக்கள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்கள் என்பவற்றை மூடுமாறும் உடனடியாக மேற்குறித்த நிறுவனங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு காத்தான்குடி சுகாதார அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிக்கை செய்து பொதுச் சுகாதார பரிசோதகரின் அங்கீகாரத்துடன் இந்நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் இதை மீறுவோருக்கு எதிராக 2009ஆம் ஆண்டு 11ஆம் இலக்க நுளம்பு பெருக்கத் தடைச்சட்டத்தின் படியும் தொற்றுநோய் தடைச்சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காத்தான்குடி பிரதேசத்தில் மேற்படி 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அவசர தொற்றுநோய் தடுப்பு பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 10.4.2014 வியாழக்கிழமைவரை காத்தான்குடி பிரதேசத்தில் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு சிறுமி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த அறிவித்தல் காத்தான்குடியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் அறிவிப்பதற்கும் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அறிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் யு.எல்.நசிர்தீன்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .