2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மண்முனைப் பாலத்தினை வைத்து அரசியல் செய்யவில்லை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மண்முனைப் பாலத்தினை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் நடத்துவதற்கான தேவை இல்லையென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;

மண்முனைப் பாலத்தின் நிலமையினையும் அதன் பூகோள ரீதியான விடயத்தினையும் அறிந்து கொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் எனக் கூறிக் கொண்டு அம்பாந்தோட்டையில் சலுகை பெற்று செயற்படும் சாணக்கியன்-இராசமாணிக்கம் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பற்றி  கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

மண்முனைப் பாலம் அமைக்கப்பட்டதை த.தே.கூ தடுக்கவில்லை

உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மண்முனைப் பாலம் அமைக்க வேண்டாம் என்றோ அப்பாலத்தினைத் தடுக்கவோ முயலவில்லை. ஆனால் மண்முனைப் பாலம் என்பது பட்டிருப்பு பாலம் போலவோ அல்லது வவுணதீவுப்பாலம் போலவோ அல்ல. மண்முனைப் பாலத்தினால் மாற்று இனத்தவர்கள்,  சுலபமாக அங்கு ஊடுருவி காணிகளை அபகரிப்பதற்கும், கலாசார சீரழிவுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். என்பதனை நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றோம்.
 
பெண்களையும், தமிழ் கலாசாரத்தினையும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிவாக கூறவில்லை. படுவான்கரையில் பிறந்து வளர்ந்த நான் அங்குள்ள சகல விடயங்களையும் நன்கு அறிந்தவன்.
சாணக்கியன் அவர்களின் பாட்டனார் இராசமாணிக்கம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தவர். அவரின் அரசியலை வைத்து, அவரின் தியாகத்தை விற்று, அரசியல் செய்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்தான் அவர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல. சாணக்கியன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து போது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு  மறைந்த இராசமாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை கடந்த 2011 ஆண்டு ஏற்பாடு செய்தது.

அதன் பிறகுதான் சாணக்கியன்  அரசியலுக்கு வந்தவர். இப்படிப்பட்ட அவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிக் கதைப்பதற்கு எந்த அருகதையும் இல்லை. அவர் ஜனாதிபதியினைப் பற்றியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைப் பற்றிக் கதைக்கலாம்.
 
மண்முனைப் பாலத்தினை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் நடத்துவதற்கான தேவை இல்லை, மண்முனைப் பாலம் படுவான்கரை மக்களுக்குத் தேவையான ஒன்று பிரயாணத்தினை இலகுபடுத்துகின்றது, அதன் மூலமாக கல்வி, சுகாதார வசதிகள், மேம்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கின்றன.

ஆனால் அந்த விடயங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் வர்த்தகங்கள் வீழ்ச்சி அடைக்கின்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இன்னும் சில காலங்களில் இதனால் வரும் வீழ்ச்சிகளை சாணக்கியனால் ஈடுசெய்யமுடியுமா? என நான் கேட்கிறேன்.

பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பது நாம் தான்

ஆகவே இப்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து இதனால் வரும் கலாசார சீர்கேடுகளிலிருந்து மக்களை காப்பதற்கும், நில அபகரிப்புக்களிலிருந்து தடுப்பதற்கும், நடவடிக்கை எடுத்துக் கொள்ளவண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. இந்த விடயங்களைத்தான் நாங்கள் பல தடவைகளில் கூறியிருக்கின்றோம்.
 
நேற்று(22)  செவ்வாய் கிழமைகூட இந்த மண்முனைப் பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் படுவான்கரைக்குள் சென்ற வேறு இனத்தினைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அப்பகுதியில் காணிகள் வாங்கலாமா என அங்குள்ள தமிழ் மக்களிடம் விசாரித்துள்ளதோடு, அப்படி என்றால் எவ்வளவு விலை வந்தாலும் பரவாயில்லை காணியினை பார்த்து தாருங்கள் எனவும் கேட்டுள்ளார்கள்.

தெரியாவிட்டால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் 

பாலம் திறக்கும்போது ஜனாதிபதியின் பின்னாலிருந்து கொண்டு முகத்தினைக் காட்டிவிட்டு, தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பற்றி கதைப்பதற்கு சாணக்கியனுக்கு உரிமையில்லை எனவே இவ்வாறான கீழ்த்தரமான அரசியலை சாணக்கியன் அவர்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். 
 
மேலும் இந்த மண்முனைப் பாலம் தொடர்பான விடையங்களை படுவான்கரை மக்களிடமோ அல்லது ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்துவிடமோ சாணக்கியன் கேட்டு அறிந்து கொள்ளலாம் எனவும் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X