2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்சிக்கு சேறு பூச அனுமதிக்கமுடியாது:பூ.பிரசாந்தன்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

கட்சிக்கு சேறு பூச ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. கட்சிக்கு  சேறு பூசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்காக   நீதிமன்றம் செல்வோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணிக்கூட்டம் வியாழக்கிழமை (12) மாலை வாவிக்கரை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் கட்சியுடன் மிக நெருக்கமாக அதன் மூலம் பல நன்மைகளை அடைந்துவிட்டு தங்களது தவறுகளை மறைக்கவே தம்மீது ஆவேசமான பேச்சுகளை சிலர் பேசுகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமமாகி  2008ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை  வலுப்படுத்தியதுடன், அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான அபிவிருத்திப் பணிகளையும் செயற்படுத்திக் காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இளைஞர்கள் தலைநிமிர்வுடனும் மரண அச்சமின்றியும் சுதந்திரமாக தாம் நினைத்தவற்றை  கற்று உயர் பதவிகளையும் சுயதொழில்களையும் விரும்பிய இடத்துக்கு சென்று மேற்கொண்டு வாழ்வதற்கான சூழலையும் எமது பெண்கள் கண்ணீருடன் அழுது புலம்பிய நிலையையும் மாற்றி ஜனாநாயக நிலையை தோற்றுவிப்பதற்கு கால்கோளிட்டது தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியேயாகும். இன்று பலர் அரசியலில் அச்சமின்றி ஜனநாயக ரீதியாக போட்டியிட முன்வருவதற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகும்.

அது மட்டுமன்றி, தமிழர்களுக்கான ஆயுதப்போராட்டம் அழிவுகளையே பெற்றுத்தரும். அரசியல் தீர்வே நிலையானதாக அமையும் என்ற நோக்குடன் தமிழ் மக்களின் போரட்டத்துக்;காக கிடைத்த குறைந்த அரசியல் தீர்வாக அமைந்தாலும், 21 வருடங்களாக தமிழ் மக்களால் நுகரமுடியாது இருந்த மாகாணசபை முறைமையை தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் ஆரம்பப் படிக்கல்லாக கொண்டு முன்நோக்கி நகரவேண்டும் என்ற தூரநோக்கோடு 2008இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணசபையின் ஆளும் அதிகாரத்தை  தன்னகத்தே மக்களின் ஆணையுடன் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் எந்த அரசியல் சக்திகளுக்கும் சோரம் போகாமல் எமது தனித்துவத்துடன் இணக்க அரசியல் செய்து காட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்தே வடக்கு மாகாணத்திலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு வடக்கு மக்களும் மாகாணசபை அரசியல் அதிகாரத்தை  அனுபவித்துவருகின்றார்கள். அது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி அமைக்கலாம். அமைச்சுப்பதவிகளை பெற்று இணக்கப்பாட்டு அரசியல் செய்யலாம் என முன்வருவதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2008இல் எடுத்த அரசியல் சாணக்கியமான முடிவு சரியானது என்பதை  வெளியுலகுக்கு பறை சாற்றுகின்றது என்றால் அது மிகையாகாது.

எமது ஆட்சிக்காலத்திலும் சரி எமது அரசியல் அதிகார நிலையிலும் சரி நாமும் எமது கட்சியின் தொண்டர்களும் யாருக்கும் எதிராக அரசியல் பழிதீர்ப்பில் ஈடுபடவில்லை. அவ்வாறு நியாய பூர்வமான மாகாணசபை ஆட்சி நடத்தியவர் எமது கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன். ஆனால், அவ்வாறு பூரண ஜனநாயக ரீதியான ஆட்சி நடத்தியதுடன், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைய தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஒட்டுக்குழு எனவும் பிள்ளையான் குழு எனவும் எமது கட்சித் தலைவரை தகாத வார்த்தைகளால் தாக்கி அறிக்கை விடுவததையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சொற்பிரயோகங்களை தமது ஊடக அறிக்கையிலும் அங்கிகரிக்கப்பட்ட மேடைகளிலும் குறிப்பிடும் சில அரசியல் தலைமைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராக உள்ளோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் எதிராக மிக மோசமாக அறிக்கை விடும் தலைமைகள் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்பதையும் எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  மூலம் பல நன்மைகளை அடைந்துவிட்டு தங்களது தவறுகளை மறைக்கவே ஆவேசமாகப் பேசுகின்றார்கள் என்பதுமே உண்மை.

அது அரசியல் நாகரிகமல்ல. ஆயினும், பல மூத்த அரசியல் தலைமைகள் மிகவும் அரசியல் நாகரிகத்துடன் சொற்பிரயோகம் செய்வதையும்; சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். அத்தோடு, எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உன்னதமான அரசியல் நாகரிகத்தை பின்பற்றவேண்டும் என்பது தலைவரின் கண்டிப்பான ஆலோசனை. அதனை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தே வருகின்றோம். எமது இளைஞர் அணி உறுப்பினர்களும் அதனை கண்டிப்பாக  கடைப்பிடிக்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .