2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மு.கா. முதலமைச்சர் பதவியை கேட்பது ஜனநாயகம் இல்லை: துரைராஜசிங்கம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பை  விட, குறைந்தளவில் வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸானது  முதலமைச்சர் பதவியை கேட்பது எந்தவிதத்திலும் ஜனநாயகம் இல்லை என்பது எமது  கோரிக்கையே தவிர, முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்படக்கூடாது என்பது எமது கோரிக்கை அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள மாகாணசபை உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நின்றுகொண்டிருக்கின்றார்கள். 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சுதந்திர நாட்டில் சுதந்திரத்தை தேடி அலைகின்ற மக்கள் என்றால், அது  இலங்கைத் தமிழர்களே தவிர, வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்கமுடியாது.

நாங்களும் எமது அரசியல் தலைவர்களும் மிகவும் கன்னியமான அரசியலை நடத்திக்கொண்டு வருபவர்கள். தற்போது கிழக்கு மாகாணசபையை பொறுத்தமட்டில் எவரை எடுத்துக்கொண்டாலும், சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது. முஸ்லிம்; ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது. தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என்று  மாறிமாறி பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு பேசவில்லை. அவ்வாறு சிந்திக்கவில்லை. அவ்வாறு கருத்து வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட்ட வகையில் கிழக்கு மாகாணசபையில் அரசு அமைக்கப்படவேண்டும் என்றே சொல்லுகின்றது.

2012ஆம் ஆண்டு நாம் 11 உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது பெரும்பான்;மை அங்கத்தவர் என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஆட்சி அமைக்கவேண்டும். இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸை அழைத்து ஆட்சி அமைப்பதற்கான தன்னுடைய கருத்தை வெளியிட்டது. இதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றாகவே இருந்தது.

ஏனெனில்,  முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்டவர்கள். எனவே இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு எதிராக பெற்ற வாக்குகளால் வந்தவர்கள்.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரஸும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைக்கவேண்டியது ஜனநாயக முறை. இந்த முறையில் தான் நாம் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களுக்கான அரசை அமைக்கவேண்டும் என்று கூறினோமே தவிர, ஜனநாயக விழுமியங்களை தள்ளிவிட்டு அல்ல.

இதே வகையில்தான், இப்போது 08ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின் கிழக்கு மாகாணசபையிலும் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் இங்கு ஆட்சி அமைக்கவேண்டியவர்கள் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட கட்சி. அது தமிழரா, சிங்களவரா, முஸ்லிமா என்று எமது கட்சி பார்க்கவில்லை. பெரும்பான்மையினரை கொண்ட கட்சி அது யாராக இருந்தாலும் சரி, அரசு அமைக்கவேண்டும். இங்கு பெரும்பான்;மை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பவர்கள் நாங்கள் 11 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸ் 07 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றார்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் சிதறிச் சின்னாபின்னமாகி இருக்கின்றார்கள். அதில் தற்போது பெரும்பான்மை இல்லை. அந்த அடிப்படையில் தான் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்கு உரித்துடையது என்று சொல்லுகின்றோமே தவிர, தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அவ்வாறு சொல்லுவது துவேசமாக அமையும். நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை பெரும்பான்மையா இருக்கும் எங்களுக்கு தரப்படவேண்டும் என்றுதான் சொல்லுகின்றறோம்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலி கூறுகின்றார் வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருப்பதால், கிழக்கில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் வரவேண்டும் என்று. இது நியாயமான கருத்தல்ல. இந்த நியாயத்தின் அடிப்படையில் நாங்கள் தமிழர் வரவேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் கேட்பது கட்சி அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இங்கு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக உரிமை உடையது என்பதே.

2012ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுகின்றபோது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட 6000 வாக்குகள்தான் குறைவாக நாங்கள் பெற்றோம். எங்களுக்கும் முஸ்லிம்; காங்கிரஸிற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 61,000 ஆகும். 61,000 வாக்கு வித்தியாசத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியைக் கேட்பது எந்த விதத்திலும் ஜனநாயகம் இல்லை என்பதுதான் எம்முடைய கோரிக்கையே தவிர முஸ்லிம்; ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்படக்கூடாது என்பது எமது கோரிக்கையல்ல.

எனவே, நாம் தமிழர்கள் கன்னியமான அரசியல் செய்பவர்கள். அரசியல் விழுமியங்களுக்கு ஊடாகச் செல்பவர்கள்.  இதனை நாம் இந்த விதமாக விளங்கிக்கொள்ளவேண்டும். இந்த விதமாக மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதனை தமிழர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற செய்தி உண்மையான செய்தியல்ல.
தமிழர்கள் அதனைப் பெறுவதற்கான ஜனநாயக விழுமியத்துடன் இருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான அருகதையற்றதாக இருக்கின்றது என்பதாலேயே நாம் எமது கருத்தில் ஆணித்தரமாக நின்று கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் நாம் கிழக்கு மாகாணத்தினுடைய கோரிக்கைகளை கேட்கின்றோமே தவிர, இதற்கு முஸ்லிம்கள் உரித்தாளிகள் அல்ல என்ற ரீதியில் நாம் கேட்கவில்லை. இந்த விடயத்தினை நாம் மிக அழுத்தம் திருத்தமாக எமது முஸ்லிம்; சகோதரர்களுக்கும் வெளிப்படுத்தவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .